செய்திகள்
தாக்குதல் நடந்த பகுதி

ஆப்கானிஸ்தான்: சோதனைச்சாவடி மீது தலிபான்கள் தாக்குதல் - 28 போலீசார் பலி

Published On 2020-09-24 22:58 GMT   |   Update On 2020-09-24 22:58 GMT
ஆப்கானிஸ்தானில் சோதனைச்சாவடியை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 28 போலீசார் உயிரிழந்தனர்.
காபுல்:

ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே 19 ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.

இந்த உள்நாட்டு போரில் ஆப்கானிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. ஆனாலும் போரை முடிவுக்கு கொண்டுவர தலிபான்கள் - அமெரிக்கா இடையே உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, கத்தார் தலைநகர் தோகாவில் தலிபான்களுக்கும் ஆப்கானிஸ்தான் அரசுக்கும் இடையே தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டு சண்டை முடிவுக்கு கொண்டுவர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆப்கானிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும் தலிபான் பயங்கரவாதிகள் தங்கள் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் உருஹன் மகாணம் ஹுசப் மாவட்டத்தில் உள்ள ஒரு சோதனைச்சாவடியில் நேற்று அதிகாலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த சோதனைச்சாவடியை சுற்றிவளைத்த தலிபான் பயங்கரவாதிகள் அங்கிருந்த போலீசார் மீது திடீர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். 

தலிபான் பயங்கரவாதிகளின் இந்த திடீர் தாக்குதலில் பாதுகாப்பு பணியில் இருந்த 28 போலீசார் கொல்லப்பட்டனர். 

இரு தரப்புக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றுவரும் சூழ்நிலையில் 28 போலீசாரை தலிபான்கள் கொன்றுள்ள சம்பவம் பேச்சுவார்த்தையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News