செய்திகள்
ஆப்கானிஸ்தான் - ராணுவத்துடனான மோதலில் 5 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
ஆப்கானிஸ்தான் ராணுவத்துடனான மோதலில் 5 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.
காபூல்:
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே 19 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் ஆப்கானிஸ்தானுக்கு பக்கபலமாக இருந்து வரும் அமெரிக்காவும், ஆப்கானிஸ்தான் அரசும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர தீவிரம் காட்டி வருகின்றன.
கடந்த பிப்ரவரி மாதம் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அமெரிக்க அரசுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படாததால் இந்த அமைதி ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
எனவே, ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரை குறிவைத்து பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள குனார் மாகாணத்தில் ராணுவ வீரர்களுக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு தரப்புக்கும் இடையே பல மணிநேரம் நடந்த சண்டையில் தலிபான் பயங்கரவாதிகள் 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.