செய்திகள்
5 லட்சத்து 36 ஆயிரம் பேர் பலி - புரட்டி எடுக்கும் கொரோனா
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 5 லட்சத்து 36 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜெனீவா:
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 36 ஆயிரத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 15 லட்சத்து 49 ஆயிரத்து 995 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 44 லட்சத்து 82 ஆயிரத்து 768 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 58 ஆயிரத்து 509 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனாவில் இருந்து 65 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5 லட்சத்து 36 ஆயிரத்து 444 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-
அமெரிக்கா - 1,32,568
பிரேசில் - 64,900
இங்கிலாந்து - 44,220
ஸ்பெயின் - 28,385
இத்தாலி - 34,861
மெக்சிகோ - 30,366
பிரான்ஸ் - 29,893
இந்தியா - 19,268