செய்திகள்
கனடாவில் சீனாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய இந்தியர்கள்
லடாக் மோதலின்போது இந்திய வீரர்களை கொன்ற சீனாவை கண்டித்து கனடாவில் இந்தியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வான்கூவர்:
இந்தியா - சீன ராணுவ வீரர்களுக்கிடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15-ந்தேதி இரவில் ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் ஒரு அதிகாரி உள்பட 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்குப் பிறகு எல்லையில் பதற்றம் அதிகரித்தது. சீனாவின் அத்துமீறலுக்கு எதிராக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. இது ஒருபுறமிருக்க, எல்லையில் பதற்றத்தை தணிக்க அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
#WATCH Canada: Indian community members hold an anti-China protest outside the Chinese Consulate office in Vancouver. pic.twitter.com/pAQedBSUR4
— ANI (@ANI) June 24, 2020
இந்நிலையில், எல்லையில் இந்திய வீரர்களை கொன்ற சீனாவைக் கண்டித்து கனடாவில் இந்திய சமூகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வான்கூவரில் உள்ள சீன தூதரக அலுவலகத்திற்கு வெளியே இந்திய தேசியக் கொடியை ஏந்தி வந்து போராட்டம் நடத்திய இந்திய சமூகத்தினர், சீனாவைக் கண்டித்து முழக்கமிட்டனர். சீனாவுக்கு எதிரான வாசகம் எழுதப்பட்ட அட்டைகளையும் ஏந்தியிருந்தனர்.
இதற்கிடையே லடாக் எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற இந்தியாவும் சீனாவும் ஒப்புதல் அளித்துள்ளன. இருநாட்டு ராணுவ அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் இதற்கான உடன்பாடு ஏற்பட்டுள்ளது.