செய்திகள்
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளி

கொரோனா பாதிப்பு- உலகளவில் பலி எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கியது

Published On 2020-03-25 05:30 GMT   |   Update On 2020-03-25 05:30 GMT
கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 18 ஆயிரத்து 907 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் தொடர்ந்து உயிர்ப்பலி அதிகரித்து வருகிறது.
ஜெனிவா:

சீனாவின் உகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 197 நாடுகளில் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. முதலில் சீனாவில் இதன் தாக்கம் அதிகமாக இருந்தது. தற்போது சீனாவில் வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டு, உயிரிழப்பும் வெகுவாக குறைந்துள்ளது. ஆனால், சீனாவை விட இத்தாலியில் அதிக அளவில் உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது. 

இன்று காலை நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 22 ஆயிரத்து 959 ஆக உயர்ந்துள்ளது. 18 ஆயிரத்து 907 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 114 பேர் குணமடைந்துள்ளனர். 2 லட்சத்து 94 ஆயிரத்து 908 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 13 ஆயிரத்து 95 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா வைரசுக்கு அதிகபட்சமாக இத்தாலியில் 6820 பேரும், சீனாவில் 3281 பேரும் பலியாகி உள்ளனர். ஸ்பெயினில் 2991 பேரும், ஈரானில் 1934 பேரும், பிரான்சில் 1100 பேரும் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கொரோனா வைரசால் 782 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவில் 562 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 11 பேர் உயிரிழந்துள்ளனர். 41 பேர் குணமடைந்துள்ளனர்.
Tags:    

Similar News