செய்திகள்
சித்தரிப்பு படம்

உலக சுகாதார அமைப்பு தலைமையகத்தையும் பதம் பார்த்த கொரோனா - இருவருக்கு பாதிப்பு

Published On 2020-03-17 12:13 GMT   |   Update On 2020-03-17 12:13 GMT
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள உலக சுகாதார அமைப்பு தலைமையகத்தில் பணியாற்றும் இருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனிவா:

கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் இதுவரை 7 ஆயிரத்து 171 பேர் உயிரிழந்துள்ளனர். 1 லட்சத்து 82 ஆயிரத்து 608 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சீனாவுக்கு அடுத்தபடியாக, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் மிக அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் 125 பேருக்கு இந்நோய் தொற்று தாக்கம் ஏற்பட்டுள்ளது. மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.



கொரோனா வைரஸ் பாதிப்பை சர்வதேச சுகாதார நெருக்கடி நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

இந்நிலையில், சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகரான ஜெனிவா நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் பணியாற்றும் இருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியதாக கடந்த வாரம் கண்டறியப்பட்டது.

அவர்கள் விடுமுறையில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்த இதர பணியாளர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டு, முடிவுகள் எதிர்பார்க்கப்படுகிறது என உலக சுகாதார அமைப்பு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, ஸ்விட்சர்லாந்து நாட்டில் ஒரே நாளில் சுமார் ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 200 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பலனின்றி இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News