செய்திகள்
ஈரான் எல்லையில் மீண்டும் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோளில் 5.7 ஆக பதிவு
ஈரான் நாட்டின் எல்லையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோளில் 5.7 ஆக பதிவாகியுள்ள நிலநடுக்கத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தெஹ்ரான்:
துருக்கி - ஈரான் எல்லையில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஈரான் நாட்டின் மேற்கு அசிர்பைஜன் மாகாணம் குவடூர் பகுதி கிராமமான ஹபாஷ்-இ-ஒலியா என்ற இடத்தை மையமாக கொண்டு நேற்று அந்நாட்டு நேரப்படி காலை 9.23 மணியளவில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் ஈரான் எல்லையில் உள்ள துருக்கியின் வான் மாகாணத்தின் பல கிராமங்கள் பாதிக்கப்பட்டன. இதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், ஈரானின் அசிர்பைஜன் மாகாணம் குவடூர் பகுதியை மையமாக கொண்டு இன்று அதிகாலை 4 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி இரவு 7.30 மணி) இரண்டாவது முறையாக மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த வீடுகள் மீண்டும் இடிந்துவிழுந்தன.
இந்த நிலநடுக்கத்தால் பல உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஆனால், மலைப்பாங்கான பகுதியில் இந்த மாகாணம் அமைந்துள்ளதால் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.