செய்திகள்
கொரோனா வைரஸ்

ஈரானில் கொரோனா வைரஸ் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

Published On 2020-02-22 14:29 GMT   |   Update On 2020-02-22 14:29 GMT
ஈரானில் கொரோனா வைரஸ் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 10 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தெஹ்ரான்:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பிற்கு 2 ஆயிரத்து 345 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
வுகான் நகரில் வசித்து வந்த வெளிநாடுகளை சேர்ந்தவர்களை அந்தந்த நாடுகள் விமானம் மூலம் தங்கள் நாட்டிற்கு அழைத்து வருகின்றனர். அவ்வாறு அழைத்துச் செல்லப்படும் நபர்களில் சிலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன் சுமார் 60 ஈரான் மாணவர்கள் சொந்த நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். 

மேலும், அவர்கள் 14 நாட்கள் தீவிர கண்காணிப்பிற்கு பிறகு வைரஸ் பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்ட பிறகு வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதற்கிடையில், ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கியதில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக ஈரான் சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. 

இதனால் கொரோனா வைரசுக்கு ஈரானில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 10 பேருக்கு வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News