செய்திகள்
நைஜீரியா

நைஜரில் அகதிகள் நிவாரண கூட்டத்தில் நெரிசல் - 22 பேர் பலி

Published On 2020-02-18 21:24 GMT   |   Update On 2020-02-18 21:24 GMT
நைஜரில் அகதிகள் நிவாரண கூட்டத்தில் ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 22 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
நியாமி:

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டில் பயங்கரவாதத்தை பரப்பி வருகின்றனர்.

பயங்கரவாத தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்ட நிலையில், சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் அண்டை நாடான நைஜரில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.

இவர்கள் நைஜரின் தென் கிழக்கு பகுதியில் நைஜீரியா மற்றும் சாத் எல்லையோரத்தில் அமைந்துள்ள டிபா நகரில் இருக்கும் அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் நைஜீரியாவின் போர்னோ மாகாண கவர்னர் நைஜரில் உள்ள அகதிகள் முகாமுக்கு சென்று, அங்குள்ள தங்கள் நாட்டு மக்களை சந்தித்து பேசினார்.

அதனை தொடர்ந்து, அவரது சார்பில் அகதிகளுக்கு உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களும், பணமும் வழங்கப்பட்டது.

இதை பெறுவதற்கு மக்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக்கொண்டு சென்றதால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 22 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
Tags:    

Similar News