செய்திகள்
ஜப்பான் கப்பல்

கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 542 ஆக அதிகரிப்பு

Published On 2020-02-18 13:58 GMT   |   Update On 2020-02-18 13:58 GMT
ஜப்பானின் யோகாஹாமா துறைமுகத்தில் நிற்கும் கப்பலில் கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 542 ஆக அதிகரித்துள்ளது.
யோகாஹாமா:

ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் துறைமுகத்துக்கு வந்த டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பல், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நடுக்கடலிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.  அதில் இருந்த 3 ஆயிரத்து 711 பயணிகள், ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.  இதில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.

சொகுசு கப்பலில் 138 இந்தியர்கள் உள்ளனர். இதில் 132 பேர் கப்பல் ஊழியர்கள் ஆவர். அவர்களில் 6 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

கப்பலில் இருந்தவர்களில் 1,219 பேருக்கு நடந்த பரிசோதனையின் முடிவில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை, வைரஸ் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 355 ஆக இருந்தது. நேற்று நடந்த சோதனையின் முடிவில் 454 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது.

இதற்கிடையே, தொடர்ந்து கப்பலில்  இருந்தோரிடம் நடந்த பரிசோதனை முடிவுகளில் இருந்து புதிதாக 88 பேருக்கு வைரஸ் பாதிப்பு உள்ளது இன்று கண்டறியப்பட்டது.  இதனால் கொரோனா வைரஸ் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 542 ஆக அதிகரித்துள்ளது.
Tags:    

Similar News