செய்திகள்
தலிபான்கள் (கோப்பு படம்)

ஆப்கானிஸ்தான் - தலிபான்கள் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட 4 பேர் பலி

Published On 2020-02-07 17:11 GMT   |   Update On 2020-02-07 17:11 GMT
ஆப்கானிஸ்தானில் இன்று தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாதிகள் உள்நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்திவருகிறது. மேலும், தங்கள் ஆளுமைக்கு கட்டுப்படாத மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்து வருகின்றனர்.

இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க உள்நாட்டு அரசுப்படைகளுடன் இணைந்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளும் தரைவழி மற்றும் வான்வெளி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனால் அரசுப் படைகளுக்கும் பயங்கரவாத குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்களும் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் ஃபர்யாட் மாகாணம் குவாசர் மாவட்டத்தில் இன்று பொதுமக்களை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் மோர்டர் ரக குண்டுகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தினர். 

பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் 3 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் என மொத்தம் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒரு பெண் படுகாயமடைந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் காயமடைந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News