செய்திகள்
ஆப்கானிஸ்தான் அரசுப்படைகள் வான்வெளி தாக்குதல் - 14 தலிபான்கள் பலி
ஆப்கானிஸ்தானில் அரசுப்படைகள் நடத்திய வான்வெளி தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகள் 14 பேர் உயிரிழந்தனர்.
காபுல்:
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் ஒருசில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு அதை ஆளுமை செய்து வருகின்றனர். மேலும், தங்களுக்கு கட்டுப்படாத பொதுமக்களை இரக்கமின்றி கொன்று குவித்துவருகின்றனர்.
இந்த பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக ஆப்கானிஸ்தான் அரசு படையினரும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப் படையினரும் தரைவழி மற்றும் வான்வெளி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டின் தென்கிழக்கே அமைந்துள்ள காந்தகார் மாகாணத்தில் உள்ள மைவ்வன்ட் மாவட்டத்தில் தலிபான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பயங்கரவாதிகளில் இடங்களை குறிவைத்து நேற்று இரவு ஆப்கானிஸ்தான் படை திடீர் வான்வெளி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 14 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், 10 பயங்கரவாதிகள் படுகாயமடைந்ததாக ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.