செய்திகள்
ஹெலிகாப்டர் மூலம் கேரட்டுகள் கொட்டப்படும் காட்சி

விலங்குகள் சாப்பிடுவதற்காக ஹெலிகாப்டர் மூலம் கேரட்டுகள் கொட்டும் ஆஸ்திரேலிய அரசு

Published On 2020-01-15 07:33 GMT   |   Update On 2020-01-15 07:33 GMT
ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ ஏற்பட்ட பகுதிகளில், உயிர் பிழைத்த விலங்குகள் சாப்பிடுவதற்காக ஹெலிகாப்டர் மூலம் ஏராளமான கேரட்டுகள் மற்றும் உருளைக்கிழங்குகளை அந்நாட்டு அரசு வீசி வருகிறது.
 கான்பெரா:

ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் கடந்த செப்டம்பர் மாதம்  முதல் காட்டுத்தீ எரிந்து வருகிறது. ஆயிரக்கணக்கான தீயணைப்புப்படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  

இந்த காட்டுத்தீயில் இதுவரை 24 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பல ஆயிரக்கணக்கான வன உயிரினங்கள் செத்து மடிந்துள்ளன.  தன்னார்வலர்களும், மீட்புப்படையினரும் தீயில் சிக்கிய விலங்குகளை மீட்டு பராமரித்து அருகில் உள்ள வனப்பகுதிகளில் விட்டு  வருகின்றனர். 

 காட்டுத் தீயினால் பல்லாயிரக்கணக்கான தாவரங்கள் மற்றும் பயிர்கள் கருகி நாசமாகியுள்ளதால் உயிர் தப்பிய விலங்குகள் உணவு  கிடைக்காமல் உயிரிழக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. 



இதை கருத்தில் கொண்டு காட்டுத்தீ ஏற்பட்ட பகுதிகளில், உயிர் பிழைத்த விலங்குகள் சாப்பிடுவதற்காக ஹெலிகாப்டர் மூலம்  ஏராளமான கேரட்டுகள் மற்றும் உருளைக்கிழங்குகளை அந்நாட்டு அரசு கொட்டி வருகிறது. 

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘காட்டுத் தீயைத் தொடர்ந்து உணவுத் தாவரங்கள் அழிந்து போனதால் உயிர் பிழைத்த  விலங்குகள் உணவின்றி இறந்து வருகின்றன. இதனைத் தடுக்க டன் கணக்கிலான கேரட் மற்றும் உருளைக்கிழங்குகள் ஹெலிகாப்டர்  மூலம் வனப்பகுதிக்குள் வீசப்படுகின்றன. இவை விலங்குகளுக்கு உணவாக பயன்படும், அதே சமயத்தில் பின்னர் பயிராகவும் வாய்ப்பு  உள்ளது’ என தெரிவித்தனர். 
Tags:    

Similar News