செய்திகள்
ஆப்கானிஸ்தான்: அமைதி குழுவினர் 27 பேரை கடத்தி சென்ற தலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தத்திற்க்கான பேரணி போன்ற செயல்களில் ஈடுபட்டுவந்த அமைதி செயல்பாட்டாளர்கள் 27 பேரை தலிபான் பயங்கரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர்.
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் மற்றும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகள் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மேலும், பொதுமக்களை கொடுமைப்படுத்துவதுடன் வன்முறை தாக்குதல்களை நடத்தி அப்பாவி மக்களைக் கொன்று குவித்து வருகின்றனர்.
பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் அந்நாட்டு அரசுப்படை மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வழி, தரைவழி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் பயங்கரவாத குழுக்களுக்கும் ராணுவத்துக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது.
இதற்கிடையில், தலிபான் பயங்கரவாத குழுவிற்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடக்கும் மோதலை தடுக்கும் விதமாகவும் பயங்கரவாத குழுக்களில் மக்கள் இணைவதை தடுக்கும் நோக்கிலும் பல்வேறு செயல்பாட்டாளர்கள் அமைதி குழு என செயல்பட்டு வருகின்றனர்.
இந்த செயல்பாட்டாளர்கள் ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டவும், அரசு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும் பேரணி போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் அந்நாட்டின் ஃபர்க் மாகாணத்தில் இருந்து 6 கார்கள் மூலம் 27 அமைதி செயல்பாட்டாளர்கள் ஹிரட் மாகாணம் நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் சென்ற வாகனங்களை இடைமறித்த தலிபான் பயங்கரவாதிகள் அமைதி செயல்பாட்டாளர்கள் 27 பேரையும் கடத்தி சென்றனர். தலிபான் பயங்கரவாதிகள் கடத்தி சென்றவர்களின் நிலை என்ன என்பது இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.