செய்திகள்
அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு மத சிறுபான்மையினரை குறிவைக்கிறது - அமெரிக்கா குற்றச்சாட்டு
அசாமில் உள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு சிறுபான்மையினரை குறிவைக்கும் ஒரு கருவி என்று சர்வதேச மத சுதந்திரம் குறித்த அமெரிக்க ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
வாஷிங்டன்:
அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வங்காள தேசத்தவர்களை கண்டறியும் வகையில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) தயாரிக்கப்பட்டது. இதன் இறுதி வரைவு பட்டியல் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் பெயர்கள் விடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து வரைவு பட்டியலில் விடுபட்டவர்கள், பெயர்களை சேர்ப்பதற்காக கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
அதன்பின், கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 3.11 கோடி பேரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. 19 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டிருந்தன. இதனால் மீண்டும் சர்ச்சை எழுந்தது. தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர் விடுபட்டவர்கள், தங்கள் இந்திய குடியுரிமையை நிரூபிக்க, உரிய ஆவணங்களுடன் வெளிநாட்டு தீர்ப்பாயத்தில் முறையிடலாம் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அசாமில் உள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, மத சிறுபான்மையினரை குறிவைப்பதற்கும் முஸ்லிம்களை நாடற்றவர்களாக மாற்றுவதற்கும் பயன்படுத்தப்படும் ஒரு கருவி என்று சர்வதேச மத சுதந்திரம் குறித்த அமெரிக்க ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.