செய்திகள்
பாக்தாதி

ஐஎஸ் தலைவர் பாக்தாதியின் மனைவியையும் கைது செய்தது துருக்கி

Published On 2019-11-07 10:36 GMT   |   Update On 2019-11-07 10:36 GMT
ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் பாக்தாதியின் மனைவியை துருக்கி அரசு கைது செய்திருப்பதாக அதிபர் எர்டோகன் அறிவித்துள்ளார்.
அங்காரா:

உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவன், அபுபக்கர் அல் பாக்தாதி, சிரியாவில் கடந்த மாதம் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது. 

சிரியாவில் இத்லிப் நகருக்கு அருகே பாரிஷா என்ற கிராமத்தில் ஒரு வளாகத்தில் பாக்தாதி, பதுங்கி இருப்பதை துப்பறிந்து கடந்த மாதம் 26-ந் தேதி அமெரிக்க சிறப்பு படை சுற்றி வளைத்தது. தப்பிக்க ஒரு வழியும் இல்லை என்ற நிலையில் தன் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க வைத்து பாக்தாதி பலியானதாக தெரிவிக்கப்பட்டது. 



இந்நிலையில், வடக்கு சிரியாவின் அஜாஸ் நகரில் பாக்தாதியின் மூத்த சகோதரி ராஸ்மியா (வயது 65), அவரது கணவர் மற்றும் குடும்பத்தினரை துருக்கி அதிகாரிகள் இரு தினங்களுக்கு முன்பு கைது செய்தனர். ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய பொறுப்பில் ராஸ்மியா இயங்குவதாக சந்தேகத்தின் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக பாக்தாதியின் மனைவியையும் துருக்கி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அங்காரா பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பேசிய துருக்கி அதிபர் எர்டோகன் இத்தகவலை தெரிவித்தார். 

பாக்தாதியின் சகோதரி, அவரது கணவர் ஆகியோர் கைது செய்யப்பட்ட தகவலையும் எர்டோகன் தெரிவித்தார். மேற்கொண்டு எந்த விவரங்களையும் அவர் வெளியிடவில்லை. 
Tags:    

Similar News