செய்திகள்
ஹாலிவுட் நடிகை ஹூப்மேன்

மகள் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற லஞ்சம் தந்த ஹாலிவுட் நடிகை ஹூப்மேனுக்கு சிறை

Published On 2019-09-14 18:50 GMT   |   Update On 2019-09-14 18:50 GMT
மகள் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற லஞ்சம் தந்த ஹாலிவுட் நடிகை ஹூப்மேனுக்கு 2 வாரம் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி இந்திரா தல்வானி உத்தரவிட்டார்.
பாஸ்டன்:

பிரபல ஹாலிவுட் நடிகை பெலிசிட்டி ஹூப்மேன். இவர் தனது மகளை பிரபல பல்கலைக்கழகத்தில் சேர்த்து படிக்க வைக்க ஆசைப்பட்டார்.

இதற்காக மகளை ரகசியமாக நுழைவுத்தேர்வு எழுத வைத்து அதிக மதிப்பெண்கள் தருவதற்காக அதிகாரிகளுக்கு 15 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.10½ லட்சம்) லஞ்சம் கொடுத்துள்ளார்.  நடிகை ஹூப்மேன் மீது பாஸ்டன் நகரில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

கடந்த மே மாதம் வழக்கு விசாரணைக்கு வந்த போது மகள் நுழைவுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்ததை ஹூப்மேன் ஒப்புக்கொண்டார். அவர் தனது செயலுக்காக கண்ணீர் சிந்தியவாறு மன்னிப்பு கேட்டார்.

இந்த வழக்கில் நடிகை ஹூப்மேன் குற்றவாளி என நீதிபதி இந்திரா தல்வானி தீர்ப்பு அளித்தார்.

அவரது தண்டனை விவரம் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அவருக்கு 2 வாரம் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி இந்திரா தல்வானி உத்தரவிட்டார். அப்போது அவர் கூறுகையில், “தகுதி வாய்ந்த மாணவ, மாணவிகளை ஏமாற்றுவதற்கு தங்கள் செல்வ வளத்தை பயன்படுத்தக்கூடாது என்ற தகவலை சமூகத்துக்கு விடுக்க வேண்டியது அவசியம். எனவே உங்களை தண்டனையின்றி விட முடியாது” என குறிப்பிட்டார்.

நடிகை ஹூப்மேனுக்கு 30 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.21 லட்சம்) அபராதமும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News