செய்திகள்
இரட்டை கோபுரம் மற்றும் பென்டகன் தாக்கப்பட்டதின் 18-வது ஆண்டு நினைவுதினம்

அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு

Published On 2019-09-11 19:13 GMT   |   Update On 2019-09-11 19:13 GMT
அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மற்றும் பென்டகன் தாக்கப்பட்டதின் 18-வது ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
நியூயார்க்:

அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி, அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை கடத்தி நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டிடம் மற்றும் ராணுவ தலைமையகமான பென்டகன் மீது மோதி வெடிக்கச் செய்தனர்.

உலகையே உலுக்கிய இந்த தாக்குதலில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொன்று குவிக்கப்பட்டனர். அத்துடன் இந்த தாக்குதல் பயங்கரவாதத்தின் கோர முகத்தை உலகுக்கு எடுத்துக்காட்டுவதாக அமைந்தது.

இந்த நிலையில் அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மற்றும் பென்டகன் தாக்கப்பட்டதின் 18-வது ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.



இதையொட்டி அமெரிக்காவில் உள்ள அனைத்து அரசு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவற்றிலும் அமெரிக்க தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடும்படி ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘2001, செப்டம்பர் 11 தாக்குதலில் உயிர்நீத்த ஒவ்வொருவருக்கும் மரியாதை செலுத்தும் விதமாக அமெரிக்க தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுவோம்’’ என குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி நேற்று நாடு முழுவதும் அமெரிக்க தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.
Tags:    

Similar News