செய்திகள்
3 மாதங்களுக்கு முன்னர் மூடுவிழா கண்ட பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம்
பாகிஸ்தானில் செயல்பட்டுவரும் மனித உரிமைகள் ஆணையம் 3 மாதங்களுக்கு முன்னரே மூடுவிழா கண்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்லாமாபாத்:
இந்திய அரசு ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கிவந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியதற்கு எதிராக பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. மேலும், காஷ்மீரில் மனித உரிமைகள் மீறல்களை இந்தியா அரங்கேற்றிவருவதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் மனித உரிமைகளை பற்றி பேசி வரும் நிலையில், அந்நாட்டின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக செயல்படாமல் உள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைவர் உள்பட 7 உறுப்பினர்களை கொண்ட அந்த மனித உரிமைகள் ஆணையம் குழுவின் பதவி காலம் 4 ஆண்டுகள் ஆகும்.
முன்னதாக பதவியில் இருந்த உறுப்பினர்களின் பதவிகாலம் கடந்த மே 30-ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. புதிய அதிகாரிகள் ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சியின் ஒப்புதலின் அடிப்படையிலேயே நியமணம் செய்யப்படுவார்கள்.
ஆனால் ஆளும் கட்சி தலைவர் இம்ரான்கானுக்கும், எதிர்கட்சி தலைவர் ஹபாஷ் ஷெரிஃபிற்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாட்டால் மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், அந்நாட்டு மனித உரிமைகள் அமைச்சகத்தின் தலைமை இயக்குனர் முகமது அர்ஹத் இதுகுறித்து கூறுகையில், ''பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகளுக்கான ஆட்கள் நியமணம் 6 முதல் 7 மாதங்களுக்குள் மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார்.