செய்திகள்
அகமது அதீப்

மாலத்தீவு முன்னாள் துணை அதிபருக்கு 15 நாள் சிறை காவல்

Published On 2019-08-06 10:25 GMT   |   Update On 2019-08-06 16:40 GMT
இந்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்ட மாலத்தீவு நாட்டின் முன்னாள் துணை அதிபர் அகமது அதீபை 15 நாள் சிறையில் அடைத்து வைக்குமாறு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மாலே:

இந்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்ட மாலத்தீவு நாட்டின் முன்னாள் துணை அதிபர் அகமது அதீபை 15 நாள் சிறையில் அடைத்து வைக்குமாறு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மாலத்தீவு நாட்டின் அதிபர் யாமீன் அப்துல் கய்யூமை கொல்வதற்கு சதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் கடந்த 2016-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். மேலும், அவருக்கு எதிரான பல்வேறு ஊழல் வழக்குகளும் தொடரப்பட்டு 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மாலத்தீவு அதிபர் பதவிக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் யாமீன் அப்துல் கய்யூம் எதிர்பாராத வீழ்ச்சியை சந்தித்தார். பின்னர், அமைந்த புதிய அரசு முன்னாள் துணை அதிபர் அகமது ஆதீப்-ஐ விடுதலை செய்தது.



அனைத்து வழக்குகளையும் மீண்டும் புதிதாக விசாரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அவரது பாஸ்போர்ட் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாலத்தீவில் இருந்து கடந்த மாதம் 27-ந்தேதி ஒரு இழுவை கப்பல் தூத்துக்குடிக்கு வந்தது. இதில் மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது ஆதீப் ரகசியமாக இந்தியாவுக்கு வந்தார்.

அவர் வரும் விவரம் பற்றி தூத்துக்குடி கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த இழுவை கப்பல் தூத்துக்குடி கடல் பகுதியில் வந்தபோது, கடலோர காவல்படையினர் அந்த இழுவை கப்பலை வழிமறித்தனர். அதில் இருந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது ஆதீபிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
 
இதைத்தொடர்ந்து மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், அந்த இழுவை கப்பலை அங்கிருந்து செல்லாமல் நிறுத்தி வைக்குமாறும், கப்பலில் இருந்து அகமது ஆதீப்பை கீழே இறக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதனால் அகமது ஆதீப் தொடர்ந்து இழுவை கப்பலிலேயே பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு இருந்தார்.

உளவுப்பிரிவு போலீசாரும் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் நீண்ட விசாரணைக்கு பிறகு மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது ஆதீப் திருப்பி அனுப்பப்பட்டார். அவரை இந்திய கடற்படையினர் சர்வதேச கடல் எல்லையில் மாலத்தீவு கடற்படையிடம்  ஓப்படைத்தனர்.

பின்னர், மாலத்தீவு தலைநகர் மாலேவுக்கு கொண்டு செல்லப்பட்ட அகமது ஆதிப்-ஐ போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சர்வதேச கடல் எல்லையில் அவரை கைது செய்வதில் போலீசார் உரிய நடைமுறைகளை கடைபிடிக்காதது தொடர்பாக கண்டனம் தெரிவித்த நீதிமன்றம் அகமது ஆதிப்-ஐ விடுதலை செய்து உத்தரவிட்டது.

பின்னர், போலீசார் முறையான கைது உத்தரவை பெற்று அவரை மீண்டும் கைது செய்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையில், இந்தியாவில் அரசியல் தஞ்சம் அடைவதற்கு அகமதி அதீப் முறைப்படி முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Tags:    

Similar News