செய்திகள்
துபாய் சாலை விபத்தில் 12 இந்தியர்கள் பலி - உறுதி செய்தது இந்திய தூதரகம்
துபாயில் நடைபெற்ற சாலை விபத்தில் 12 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
துபாய்:
ஓமன் நாட்டு தலைநகரம் மஸ்கட்டில் இருந்து துபாய் நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அதில் வெளிநாட்டவர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
துபாய் அருகே ராஷியா என்ற பகுதியில் வந்தபோது, பேருந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
நேற்று மாலை 6 மணிக்கு விபத்து நிகழ்ந்த நிலையில் உயிரிழந்தவர்களின் விபரம் தற்போது வெளியாகியுள்ளது.
இந்நிலையில், துபாயில் நடைபெற்ற சாலை விபத்தில் ராஜகோபாலன், பெரோஸ்கான் பதான், ரேஷ்மா பெரோஸ்கான் பதான், தீபக் குமார், ஜமாலுதின் அரக்கவெட்டில், கிரண் ஜானி, வாசுதேவ், திலக்ராம் ஜவகர் தாக்குர் உள்பட 12 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் சில உடல்கள் அடையாளம் காணப்படாத நிலையில், பலியான இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.