செய்திகள்
நீரின்றி தவித்த பாகிஸ்தானியர்களுக்கு கைப்பம்புகள் அமைத்துக் கொடுத்து உதவிய இந்தியர்
இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் பாகிஸ்தானின் தர்பார்கர் மாவட்ட மக்களின் தண்ணீர் பஞ்சத்தை போக்க 62 கைப்பம்புகளை அமைத்து கொடுத்துள்ளார்.
துபாய்:
இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜோகிந்தர் சிங் சலரியா, துபாயில் போக்குவரத்து நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் சமூக சேவை செய்வதற்காக கடந்த 2012-ம் ஆண்டு பெஹல் அறக்கட்டளையை தொடங்கினார். இதன்மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள தர்பார்கர் மாவட்ட மக்கள் தண்ணீரின்றி திண்டாடி வருவதாக சலரியாவுக்கு சமூக வலைத்தளம் மூலம் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள சமூக ஆர்வலர்கள் உதவியுடன் அங்கு தண்ணீர் பிரச்சனையை தீர்க்கும் முயற்சியில் சலரியா இறங்கினார்.
இதனையடுத்து பேஸ்புக் மூலம் பாகிஸ்தானின் தர்பார்கர் மாவட்டத்தில் உள்ள கங்கர் என்ற சமூக ஆர்வலரை தொடர்புகொண்ட சலரியா, அவரிடம் தண்ணீர் பம்புகள் அமைக்க தேவைப்படும் நிதியை அளித்து வேலையை முடுக்கிவிட்டார். இதனையடுத்து கிராமத்திற்கு ஒரு பம்புகள் வீதம் அம்மாவட்டத்தில் உள்ள 62 கிராமங்களுக்கும் கைப்பம்புகள் அமைக்கப்பட்டன. இதேபோல் அப்பகுதி மக்களுக்காக உணவு தானியங்களையும் அவர் அனுப்பி உதவியுள்ளார். சலரியாவின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
சலரியாவின் உதவியுடன் கைப்பம்புகளை அமைத்த சமூக ஆர்வலர் கங்கர் கூறுகையில், "தண்ணீர் பிரச்சனையை போன்று இங்கு பல்வேறு அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர். ஒருசில கிராமங்களில் தான் சாலை வசதி உள்ளது. மருத்துவமனைகள் 50 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குள்ள பள்ளிகளிலும் அடிப்படை வசதிகள் எதுவுமில்லை. அதுமட்டுமின்றி பள்ளிகளும் வெகுதொலைவில் அமைந்துள்ளதால் பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமல் வீட்டிலேயே முடக்கிவைக்கும் சூழல் நிலவுகிறது" என அவர் வேதனையுடன் கூறினார்.