செய்திகள்

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 2 இந்தியர்கள் கைது

Published On 2019-04-20 06:10 GMT   |   Update On 2019-04-20 06:10 GMT
அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்று வழிதெரியாமல் தவித்த 2 இந்தியர்களை ரோந்துப் படையினர் மீட்டு கைது செய்தனர். #IndianNationals
நியூயார்க்:

அமெரிக்காவிற்குள் ஆட்கடத்தல் கும்பல் மூலம் சட்டவிரோதமாக ஊடுருவ முயன்று, பாலைவனப் பகுதியில் வழிதெரியாமல் சிக்கித் தவிக்கும் அகதிகளை மீட்பதற்காக மெக்சிகோ எல்லைப்பகுதியில் சூரிய மின்சக்தி மூலம் இயங்கும் மீட்பு சிக்னல் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து, தொலைபேசி மூலம் 911 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டோ அல்லது மீட்பு சிக்னலை ஆக்டிவேட் செய்தோ உதவி கேட்கலாம். இதன்மூலம் ஏராளமான அகதிகள் மீட்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவ்வகையில், கடந்த புதன்கிழமை அரிசோனா மாநிலத்தில் உள்ள மீட்பு சிக்னல் டவரில் இருந்து சிக்னல் வந்துள்ளது. இதையடுத்து எல்லை ரோந்துப் படை போலீசார் அங்கு சென்று, சிக்னல் டவர் அருகே வழிதெரியாமல் தனியாக நின்றிருந்த 2 நபர்களை மீட்டனர்.

விசாரணையில் அவர்கள், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதும், சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய முயன்றதும் தெரியவந்தது.

இருவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், மருத்துவ உதவி எதுவும் தேவையில்லை என்றும் அமெரிக்காவின் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. எனவே, அவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, பின்னர் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. #IndianNationals
Tags:    

Similar News