செய்திகள்
மாலியில் ஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் - 8 வீரர்கள் பலி
மாலி நாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை முகாம் மீது இன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 வீரர்கள் உயிரிழந்தனர். #UNbaseAttack #Malipeacekeepers
பமாக்கோ:
மேற்காப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலி நாட்டில் கொய்தா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் உள்ள ஜிஹாதிகள் போராட்டக் குழு மற்றும் டுவாரெக் புரட்சியாளர்கள் குழுவில் கட்டுப்பாட்டில் இருந்துவந்த வடக்கு மாலியில் பிரான்ஸ் தலைமையிலான படைகள் நடத்திய தாக்குதலில் இந்த குழுவினர் அனைவரும் கடந்த 2013-ம் ஆண்டு விரட்டியடிக்கப்பட்டனர்.
எனினும், சமீபகாலமாக இந்த குழுவினரின் ஆதிக்கம் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. பிரபல அரசியல்வாதிகள், மந்திரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் செல்வந்தர்கள் தங்கியிருக்கும் இடங்களின்மீது அதிரடியாக தாக்குதல் நடத்தும் சில பயங்கரவாதக் குழுவினர், பொதுமக்களில் பலரை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்து, ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்று வருகின்றனர்.
மாலியில் பயங்கரவாதச் செயல்களை ஒழிக்கவும், அமைதியை நிலைநாட்டவும் பிரசாரம் செய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையை சேர்ந்த பத்தாயிரத்துக்கும் அதிகமான அமைதிப்படையினர் மாலியில் முகாமிட்டுள்ளனர். இதில் இந்தியா உள்பட பன்னாட்டுப் படைகளை சேர்ந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், மாலி நாட்டின் வடக்கு பகுதியில் கிடால் நகரில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தில் அகுவெல்ஹோக் என்ற இடத்தில் உள்ள ஐ.நா. அமைதிப்படை முகாம் மீது ஆயுதமேந்திவந்த மர்ம நபர்கள் இன்று நடத்திய தாக்குதலில் சாட் குடியரசு நாட்டை சேர்ந்த 8 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
#UNbaseAttack #Malipeacekeepers