செய்திகள்

ஜி-20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி அர்ஜென்டினா சென்றடைந்தார்

Published On 2018-11-29 14:32 GMT   |   Update On 2018-11-29 14:32 GMT
ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று அர்ஜென்டினா சென்றடைந்தார். #ModileaveArgentina #G20summit
புய்னோஸ் எய்ரேஸ்:

ஜி-20 என்று சுருக்கமாக அழைக்கப்படும் அமைப்பானது உலகில் வளர்ச்சி அடைந்த 20 நாடுகளான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய‌வை இடம்பெற்றுள்ளன.
 
இந்த அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் உச்சி மாநாடுகள் நடைபெற்று வருகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான 13-வது உச்சி மாநாடு அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் புய்னோஸ் எய்ரேஸ் நகரில் நாளை தொடங்கி டிசம்பர் முதல் தேதி வரை நடைபெறுகிறது.



இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று மாலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அர்ஜென்டினா புறப்பட்டார். 

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று மாலை அர்ஜென்டினா தலைநகரம் புய்னோஸ் எய்ரேஸசை சென்றடைந்தார். விமான நிலையம் வந்த மோடிக்கு தூதரக அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இந்த மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவார். மாநாடு முடிந்ததும் அங்கிருந்து டிசம்பர் 2-ம் தேதி அவர் தாயகம் திரும்புகிறார் என இந்திய வெளியுறவு துறை தெரிவித்துள்ளது. #ModileaveArgentina  #G20summit
Tags:    

Similar News