செய்திகள்

கிர்கிஸ்தான் அதிபருடன் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் சந்திப்பு

Published On 2018-08-04 01:29 GMT   |   Update On 2018-08-04 01:29 GMT
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கிர்கிஸ்தான் அதிபர் சூரோன்பாய் ஜீன்பேகோவை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். #SushmaSwaraj
பிஸ்கெக் :

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு 4 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். 

பயணத்தின் முதல் நாடாக கடந்த 2-ம் தேதி கஜகஸ்தான் சென்றடைந்த சுஷ்மா அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி உள்பட முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். கஜகஸ்தான் நாட்டில் வாழும் இந்தியர்கள், தலைநகர் அஸ்டானாவில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பங்கேற்று அவர் உரையாற்றினார் 

கஜகஸ்தான் பயணத்தை நிறைவு செய்துவிட்டு கிர்கிஸ்தான் சென்றைடைந்த சுஷ்மாவை இஷ்க் கல் விமான நிலையத்தில் கிர்கிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி எர்லன் அப்ட்ய்ல்டேவ் வரவேற்றார். பின்னர் நடைபெற்ற சுஷ்மா - எர்லன் அப்ட்ய்ல்டேவ் சந்திப்பில் பாதுகாப்பு, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் இருநாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் ஆலோசித்தனர்.

தொடர்ந்து, கிர்கிஸ்தான் அதிபர் சூரோன்பாய் ஜீன்பேகோவை சந்தித்து பேசிய சுஷ்மா, மத்திய ஆசிய நாடுகளுடன் அனைத்து துறைகளிலும் இந்தியாவின் உறவுகளை விரிவுபடுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். கிர்கிஸ்தான் பயணத்தை முடித்துவிட்டு இன்று உஸ்பெகிஸ்தான் செல்லும் சுஷ்மா அங்கு இன்று மற்றும் நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். #SushmaSwaraj
Tags:    

Similar News