செய்திகள்
டேராடூனில் யோகா நிகழ்ச்சிக்கு சென்ற மூதாட்டி மயங்கி விழுந்து மரணம்
சர்வதேச யோகா தினத்தையொட்டி டேராடூனில் மோடி தலைமையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சிக்கு சென்ற மூதாட்டி ஒருவர், மயங்கி விழுந்து உயிரிழந்தார். #YogaWomanDied
டேராடூன்:
இந்திய பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று ஜூன் மாதம் 21-ம் தேதியை உலக யோகா தினமாக கொண்டாட ஐ.நா. சபை தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ந்தேதி உலக யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் (எப்ஆர்ஐ) நடந்த பிரமாண்ட யோகா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு யோகாசனங்கள் செய்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற 73 வயது மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்த தகவல் வெளியாகி உள்ளது.
டேராடூன் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த சுதா மிஷ்ரா (73) என்ற பெண், யோகா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அதிகாலை 4 மணிக்கு வந்துள்ளார். ஆனால் எப்ஆர்ஐ நுழைவு வாயிலைக் கடந்ததும் அந்த பெண் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டதாக காவல்துறை இன்று தெரிவித்துள்ளது. #YogaWomanDied