செய்திகள்

அமெரிக்க தூதரக அதிகாரி பாகிஸ்தானை விட்டு வெளியேற தடை

Published On 2018-04-26 19:52 GMT   |   Update On 2018-04-26 19:52 GMT
அமெரிக்க தூதரக அதிகாரியின் கார், மோட்டார் சைக்கிள் ஓட்டிய நபர் மீது மோதி விபத்தில் உயிரிழந்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் பாகிஸ்தானை விட்டு அவர் வெளியேற தடை விதித்து உத்திரவிடப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் அதிகாரியாக பணி ஆற்றுபவர் கர்னல் ஜோசப் இமானுவேல் ஹால். சமீபத்தில் இவர் ஓட்டிச்சென்ற கார், பாகிஸ்தானியர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய அதீக் பெய்க் (வயது 22) உயிரிழந்தார். அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.

உயிரிழந்த அதீக் பெய்க்கின் தந்தை, விபத்தில் தன் மகனை கொன்றுவிட்ட அமெரிக்க தூதரக அதிகாரி ஜோசப் இமானுவேல் ஹாலை கைது செய்து, அவர் மீது இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.

ஆனால் தூதரக அந்தஸ்து காரணமாக கைது செய்வதில் இருந்து அவர் விலக்கு உரிமை பெற்று உள்ளார் என அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

பாகிஸ்தானிய ஊடகங்களில் ஜோசப் இமானுவேல் ஹால் குடிபோதையில் வாகனம் ஓட்டிச்சென்றுதான் விபத்தை ஏற்படுத்தியதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை அமெரிக்க தூதரகம் மறுத்தது.

இந்த நிலையில், பாகிஸ்தான் துணை அட்டார்னி ஜெனரல் ராஜா கலித் மகமது, இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் ஆஜர் ஆனார். அவரும், “பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஜோசப் இமானுவேல் ஹால் மீது வழக்கு தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்த முடியாது. அவருக்கு தூதரக அதிகாரி என்ற முறையில் விலக்கு உரிமை உள்ளது. ஆனால் அவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டார். பாகிஸ்தான் விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டு விட்டன” என்று கூறினார். 
Tags:    

Similar News