செய்திகள்

பெர்லின் நகரில் இரண்டாம் உலகப்போர் காலத்து குண்டுகள் கண்டுபிடிப்பு - மக்கள் வெளியேற்றம்

Published On 2018-04-20 10:22 GMT   |   Update On 2018-04-20 10:22 GMT
இரண்டாம் உலகப்போர் காலத்து வெடிக்காத குண்டுகளை செயலிழக்க வைப்பதற்காக பெர்லின் நகரில் இருந்து இன்று பல்லாயிரக்க்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
பெர்லின்:

ஜெர்மனி - பிரிட்டன் இடையே கடந்த 1944-ம் நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின்போது பெர்லின் நகரில் உள்ள பல பகுதிகளின்மீது பிரிட்டன் நாட்டு விமானப்படைகள் மிகப்பெரிய வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இதில் பல நகரங்கள் இடிந்து, தரைமட்டமாகி, நிர்மூலமாகிப் போனது.

பின்னர், மெல்ல,மெல்ல மீண்டும் கட்டமைக்கப்பட்ட பல நகரங்கள் தற்போது புதுப்பொலிவுடன் மிளிர்கின்றன.

இந்நிலையில், பெர்லினில் உள்ள ஹெய்டேஸ்ராஸ்ஸி பகுதியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த சிலர் பள்ளம் தோண்டியபோது மிகப்பெரிய வெடிகுண்டு ஒன்றை சமீபத்தில் கண்டுபிடித்தனர்.

பிரிட்டன் நாட்டு விமானப்படைகளால் வீசப்பட்டு வெடிக்காமல் போன சுமார் 500 கிலோ எடையுள்ள இந்த குண்டை நாளை செயலிழக்க வைப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இதையடுத்து, இங்குள்ள ஹாப்ட்பான்ஹாஃப் மத்திய ரெயில் நிலையம், அருகாமையில் உள்ள பஸ் நிலையம், ராணுவ ஆஸ்பத்திரி போன்றவை மூடப்பட்டுள்ளன. சுமார் 800 மீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்கள் அனைவரையும் தங்களது வீடுகளில் இருந்து தற்காலிகமாக வெளியேறுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதன் எதிரொலியாக சுமார் 10 ஆயிரம் மக்கள் தங்களது வீடுகளை விட்டு, வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அந்த பகுதியில் பொது வாகனப் போக்குவரத்துக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News