செய்திகள்
ரி சோன்-குவான்

வடகொரியா - தென்கொரியா இடையே மார்ச் 29-ம் தேதி பேச்சுவார்த்தை

Published On 2018-03-24 10:36 GMT   |   Update On 2018-03-24 10:36 GMT
பகை நாடுகளாக விளங்கிவரும் வடகொரியா- தென்கொரியா அதிபர்கள் அடுத்தமாதம் சந்திக்கவுள்ள நிலையில் இருநாடுகளின் அதிகாரிகள் மட்டத்தில் வரும் 29-ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
சியோல்:

ஐக்கிய நாடுகள் சபையின் தடையை தகர்த்து, அடுத்தடுத்து ஏவுகணை சோதனை, அணுகுண்டு பரிசோதனை என உலக நாடுகளை அதிர வைத்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தற்போது சில மாதங்களாக மனம்மாறி வெள்ளைக்கொடி காட்டி வருகிறார்.

சமீபத்தில் தென்கொரியா தலைநகர் சியோலில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு தனதுநாட்டு அணியை அனுப்பியது, தென்கொரியா அரசு பிரதிநிதிகள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது ஆகியவற்றின் மூலம் அனைவரின் புருவங்களை உயர வைத்தார்.

பேச்சுவார்த்தைக்கு வந்த தென்கொரிய பிரதிநிதிகளிடம் இப்போதைக்கு ஏவுகணை சோதனைகள் இருக்காது எனவும், அமெரிக்கா உடன் பேச தயாராக இருப்பதாகவும் கிம் தெரிவித்ததாக கூறப்பட்டது.

கிம் ஜாங் உன் உடனான பேச்சுவார்த்தைக்கு டொனால்டு டிரம்ப்பும் கிரீன் சிக்னல் கொடுத்துள்ள நிலையில் வரும் மே மாதத்தில் அமெரிக்கா - வடகொரியா இடையேயான பேச்சுவார்த்தை நடக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன்னதாக வடகொரியா - தென்கொரியா அதிபர்கள் வரும் ஏப்ரல் மாதம் நேருக்குநேர் சந்தித்துப்பேச ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதற்கு பாதை அமைக்கும் வகையில் இருநாட்டு உயரதிகாரிகள் இடையே மார்ச் 29-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் மூன்று உயரதிகாரிகளின் பெயர்களை வடகொரியா இன்று அறிவித்துள்ளது. அமைதி மறுஇணைப்பு குழுவின் தலைவர் ரி சோன்-குவான் தலைமையிலான இந்த குழுவினர்தான் முன்னர் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்பதற்கான சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Tamilnews
Tags:    

Similar News