search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்கொரியா"

    • அமெரிக்கா- தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சி 11 நாட்கள் நடைபெற்றது.
    • இந்த ராணுவ பயிற்சியை தங்களது நாட்டிற்கு எதிரான போர் ஒத்திகை என வடகொரியா பார்க்கிறது.

    தென்கொரியா- அமெரிக்கா இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டன. இதை தங்களது நாட்டிற்கு எதிராக போர் தொடுப்பதற்கான ஒத்திகை என வடகொரியா கருதுகிறது.

    இதனால் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா, இன்று காலை கிழக்கு கடற்கரையில் குறுகிய தூரம் சென்று தாக்கி அழிக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை செலுத்தி சோதனை நடத்தியுள்ளது.

    இன்று காலை 7.44 மணிக்கு இரண்டு ஏவுகணைகளை ஒரே நேரத்தில் சோதனை நடத்திய நிலையில், 37 நிமிடங்கள் கழித்து மேலும் ஒரு ஏவுகணை சோதனை நடத்தியதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

    ஜப்பானை ஒட்டியுள்ள கடற்கரையில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருவது அந்த நாட்டிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

    வடகொரியா நடத்தும் ஏவுகணை சோதனையின்போது ஏவுகணைகள் கொரிய தீபகற்பத்திற்கும், ஜப்பான் கடல் பகுதிக்கும் இடையில் விழுகின்றன. இது அனைத்தும் ஜப்பான் பொருளாதார மண்டத்திற்கு வெளியில்தான் நடக்கிறது. இதனால் ஜப்பானுக்கு காயமோ, சேதமோ இல்லை என பாராளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்திருந்தார்.

    ஆனால், வடகொரியாவின் தொடர் சோதனை நாட்டின அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு மிரட்டல் என அவர் கூறவில்லை. அதேவேளையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறுவதாக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

    இன்று காலை ஏராளமான ஏவுகணைகளை வடகொரியா பரிசோதனை செய்ததை கண்டறிந்துள்ளோம் என தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. இது கொரிய தீபகற்பத்தின் அமைதிக்கு மிரட்டல் எனவும் தெரிவித்துள்ளது. அமெரிக்கா உதவியுடன் எந்தவொரு ஆத்திரமூட்டும் செயலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

    மணிக்கு 50 கி.மீட்டர் வேகத்தில் சென்று 300 முதல் 350 கி.மீட்டர் தூரம் வரையிலான இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை சோதனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    11 நாட்கள் கொண்ட அமெரிக்கா-தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சி கடந்த வியாழக்கிழமை முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

    • வருகிற கல்வியாண்டு முதல் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை 2 ஆயிரமாக உயர்த்தப்படும் என அரசாங்கம் அறிவித்தது.
    • அதிகமான டாக்டர்களை பணியமர்த்தும்போது தேவையற்ற சிகிச்சை மேற்கொள்ளும் சூழல் நிலவும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    சியோல்:

    தென்கொரியாவில் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் டாக்டர்கள் பணிபுரிகின்றனர். அங்குள்ள மக்கள்தொகையின்படி 10 ஆயிரம் பேருக்கு 25 டாக்டர்கள் என்ற நிலை உள்ளது.

    எனவே டாக்டர்களின் பற்றாக்குறையை தீர்க்க அரசாங்கம் முடிவு செய்தது. அதன்படி வருகிற கல்வியாண்டு முதல் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை 2 ஆயிரமாக உயர்த்தப்படும் என அரசாங்கம் அறிவித்தது.

    அரசின் இந்த அறிவிப்பால் டாக்டர்களின் பணிச்சுமை குறையும். அதேபோல் நோயாளிகளுக்கும் சிகிச்சை எளிதில் கிடைக்கும் என அரசாங்கம் எதிர்பார்த்தது. ஆனால் அதற்கு நேர்மாறாக அரசின் இந்த மருத்துவ கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து டாக்டர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    அதாவது 2 ஆயிரம் பேரை கையாளக்கூடிய அளவுக்கு நம்மிடம் போதுமான மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. மேலும் அளவுக்கு அதிகமான டாக்டர்களை பணியமர்த்தும்போது தேவையற்ற சிகிச்சை மேற்கொள்ளும் சூழல் நிலவும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    முக்கியமாக அதிகளவில் டாக்டர்கள் உருவாக்கினால் எதிர்காலத்தில் தங்களுக்கு சம்பளம் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் அஞ்சுகின்றனர். எனவே அவர்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே போராட்டத்தின் ஒருபகுதியாக ஒரே நாளில் 1,600-க்கும் அதிகமான பயிற்சி டாக்டர்கள் ராஜினாமா செய்தனர். இதனால் அங்கு டாக்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.

    இதன் காரணமாக ஏராளமான ஆபரேசன்கள் ரத்து செய்யப்பட்டதால் நோயாளிகள் உரிய சிகிச்சை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். எனவே டாக்டர்கள் இந்த போராட்டத்தை உடனடியாக கைவிடும்படி தென்கொரிய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.

    • வடகொரியா, அவ்வப்போது ஏவுகணை வீச்சு போன்றவற்றில் ஈடுபட்டு தென்கொரியாவை அச்சுறுத்தி வருகிறது.
    • கொரிய நாடுகளுக்கு கிழக்கே உள்ள கடற்கரை பகுதியில் வடகொரியா கடற்படையை சேர்ந்த போர்க்கப்பல்கள் கண்காணிப்பு பணி மேற்கொண்டன.

    சியோல்:

    கொரிய தீபகற்ப நாடுகளான வடகொரியா, தென்கொரியா இடையே மோதல் வலுத்து வருகிறது. இதனால் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் ராணுவம் மற்றும் உளவு தகவல்கள் பரிமாற்றத்தில் தென்கொரியா முன்னேற்றம் கண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியா, அவ்வப்போது ஏவுகணை வீச்சு போன்றவற்றில் ஈடுபட்டு தென்கொரியாவை அச்சுறுத்தி வருகிறது.

    இந்தநிலையில் கொரிய நாடுகளுக்கு கிழக்கே உள்ள கடற்கரை பகுதியில் வடகொரியா கடற்படையை சேர்ந்த போர்க்கப்பல்கள் கண்காணிப்பு பணி மேற்கொண்டன. அப்போது அவை நிலத்தில் இருந்து வானத்தை தாக்கும் சக்தி கொண்ட நவீன ரக ஏவுகணைகளை சோதித்து பார்த்துள்ளன. வான்நோக்கி சரமாரியாக ஏவப்பட்ட அந்த ஏவுகணைகள் இலக்கை வெற்றிகரமாக தகர்த்ததாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்காவுடன் இணைந்து விசாரிக்க உள்ளதாகவும் தென்கொரியா தெரிவித்துள்ளது.

    • வடகொரியாவில் தென்கொரியா நாடகங்களை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • தென் கொரியா நாட்டின் பாப் இசை சினிமாவை பார்த்த 2 சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் கடும் வேலை செய்யும் தண்டனை.

    தென் கொரியா பாப் இசை சினிமாவை கண்டு களித்த 16 வயதான இரண்டு சிறுவர்கள் தண்டிக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வடகொரியா மக்கள் தென் கொரியா மக்களுடன் எந்த வகையில் தொடர்பு ஏற்படுத்தினாலும் சொந்த நாட்டு மக்களுக்கே தண்டனை வழங்கும் கொடூரம் சமீப காலமாக நிலவி வருகிறது. அந்நாட்டு அதிபராக இருக்கும் கிம் ஜோங் உத்தரவில் தான் இது தொடர்வதாக கூறப்படுகிறது. வடகொரியாவில் தென்கொரியா நாடகங்களை பார்க்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி தென் கொரியா நாட்டின் பாப் இசை சினிமாவை பார்த்த 2 பள்ளி சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் கடும் வேலை செய்யும் தண்டனையை வடகொரியா அரசு வழங்கியுள்ளது.

    இது தொடர்பாக வட கொரியாவில் இருந்து வெளியேறி டோக்கியோ பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் பேராசிரியராக இருக்கும் முனைவர் சோய் க்யோங் ஹுய் கூறுகையில், "இதுபோன்ற கடுமையான தண்டனையை அளித்ததன் மூலம் ஒட்டுமொத்த வட கொரிய மக்களுக்கும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் கொரிய கலாச்சாரம் வட கொரியாவில் ஊடுருவி வருவதை இது உறுதிப்படுத்துகிறது. அது கிம் ஜோங் உன் கட்டமைத்துள்ள வட கொரிய சிந்தனையை எதிர்ப்பதாக உள்ளது. அதனாலேயே அவர் இத்தகைய தண்டனைகளை அமல்படுத்துகிறார்" என்று தெரிவித்துள்ளார்.

    • வடகொரியாவின் தாக்குதலுக்கு தென் கொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
    • கொரிய தீபகற்பத்தில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    சியோல்:

    வடகொரியா-தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இதில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

    தங்களை சீண்டினால் அணு ஆயுத தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம் என்று தென்கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு சமீபத்தில் வடகொரியா எச்சரிக்கை விடுத்தது.

    இந்நிலையில் தென் கொரியாவின் யோன் பியோங் தீவுப்பகுதியை குறிவைத்து இன்று காலை பீரங்கி மூலம் குண்டுகளை வீசி வடகொரியா திடீர் தாக்குதல் நடத்தியது. 200-க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகள் யோன் பியோங் தீவுக்கு அருகே இருநாட்டிற்கும் இடையேயான பாதுகாக்கப்பட்ட மண்டலமான கடல்பகுதியில் விழுந்தன. தாக்குதலையடுத்து தீவுப் பகுதியில் உள்ள பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி தென்கொரிய ராணுவம் உத்தரவிட்டுள்ளது. பீரங்கி தாக்குதலை தொடர்ந்து எல்லையில் பாதுகாப்பை தென்கொரியா அதிகரித்து உள்ளது. வடகொரியாவின் தாக்குதலுக்கு தென் கொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இது குறித்து தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "இது கொரிய தீபகற்பத்தில் அமைதியை அச்சுறுத்தும் ஆத்திரமூட்டும் செயல்.

    இந்த அதிகரித்து வரும் நெருக்கடிக்கு வட கொரியா முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்று நாங்கள் கடுமையாக எச்சரிக்கிறோம், மேலும் இந்த நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு அவர்களை கடுமையாக வலியுறுத்துகிறோம்.

    எங்கள் ராணுவம் அமெரிக்காவுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கிறது. மேலும் வட கொரியாவின் ஆத்திர மூட்டல்களுக்கு பதிலளிக்கும் வகையில் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    • மர்மநபர் ஆட்டோகிராஃப் கேட்பது போன்று அருகில் வந்து கத்தியால் தாக்கியுள்ளார்.
    • துப்பாக்கி கையாள்வதற்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், கத்தி போன்ற ஆயுதங்களால் வன்முறை.

    தென்கொரியாவின் எதிர்க்கட்சி தலைவரான லீ ஜே-மியுங்கை மர்ம நபர் திடீரென கழுத்தில் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஜனநாயக கட்சியின் தலைவரும், தென்கொரியாவின் எதிர்க்கட்சி தலைவருமான லீ ஜே-மியுங் தெற்கு துறைமுக நகரமான புசன் சென்றுள்ளார். அங்குள்ள விமான நிலையத்தை சுற்றி பார்க்கும்போது மர்ப நபரால் தாக்கப்பட்டுள்ளார்.

    மர்ப நபர் லீ ஜே-மியுங்கிடம் ஆட்டோகிராஃப் வாங்குவதுபோல் அருகில் வந்துள்ளார். அருகில் வந்ததும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் லீயின் கழுத்தில் குத்தியுள்ளார். இதனால் லீ ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார்.

    அருகில் இருந்தவர்கள் ரத்தம் வெளியாறாமல் இருக்க தங்களது கைக்குட்டைகளால் அழுத்தி பிடித்துள்ளனர். உடனடியாக சிகிச்சைக்கான மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவம் தென்கொரியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட மர்ம நபர் சம்பவ இடத்திலேயே பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

    தென்கொரியால் துப்பாக்கிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலயைில், மற்றவகை ஆயுதங்களால் அரசியல் வன்முறை நிகழ்ந்து வருகின்றன.

    • தென்கொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது.
    • ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள விண்வெளி படைத்தளத்தில் இருந்து செயற்கைக்கோளை ஏவியது.

    சியோல்:

    வடகொரியா சமீபத்தில் ராணுவ உளவு செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவி நிலை நிறுத்தியது. இதற்கு தென்கொரியா, அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    இதற்கிடையே உளவு செயற்கைக்கோள் மூலம் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, ராணுவ தலைமையகமான பென்டகன், கடற்படை தளம் ஆகியவற்றை படம் பிடித்ததாக வடகொரியா தெரிவித்தது.

    மேலும் இவ்விவகாரம் தொடர்பாக பேச்சு வார்த்தைக்கு அழைத்த அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்தது.

    இந்த நிலையில் தென்கொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது.

    ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள விண்வெளி படைத்தளத்தில் இருந்து செயற்கைக்கோளை ஏவியது.

    ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் தென்கொரியா செய்துள்ள ஒப்பந்தத்தில் 2025-ம் ஆண்டுக்குள் 5 உளவு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டது. அதில் முதல் செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளது.

    வடகொரியாவுக்கு போட்டியாக தென்கொரியாவும் உளவு செயற்கைக்கோளை ஏவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அணு ஆயுதங்கள் தாங்கிய இந்த நீர்மூழ்கி கப்பல் கொரியா தீப கற்பம் மற்றும் ஜப்பானுக்கு இடையே உள்ள கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடும்.
    • என்னென்ன அணு ஆயுதங்கள் இந்த கப்பலில் உள்ளன என்பது தொடர்பான விவரங்கள் எதையும் வடகொரியா தெரிவிக்கவில்லை.

    சியோல்:

    வடகொரியா- தென் கொரியா இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்க படையினர் கொரியா தீபகற்ப பகுதிகளில் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தி வருகிறது. உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வடகொரியா இந்த சோதனையில் ஈடுபட்டு வருகிறது. 'இந்த நிலையில் வடகொரியா தனது கடற்படையை பலப்படுத்தும் விதமாக முதல் முறையாக அணுசக்தி தாக்குதல் நடத்தும் நவீன நீர்மூழ்கி கப்பலை தயாரித்து உள்ளது.

    இந்த நீர்மூழ்கி கப்பல் தற்போது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இதனை வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அணு ஆயுதங்கள் தாங்கிய இந்த நீர்மூழ்கி கப்பல் கொரியா தீப கற்பம் மற்றும் ஜப்பானுக்கு இடையே உள்ள கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடும்.

    பல மணி நேரம் நீரில் மூழ்கியபடி பயணம் செய்யும் வகையில் இக்கப்பல் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதில் இருந்து அணுஆயுத தாக்குதல் நடத்தலாம். என்னென்ன அணு ஆயுதங்கள் இந்த கப்பலில் உள்ளன என்பது தொடர்பான விவரங்கள் எதையும் வடகொரியா தெரிவிக்கவில்லை.

    இதன் தொடர்ச்சியாக தற்போது கடற்படையில் உள்ள நீர்மூழ்கி கப்பல்களை அணு ஆயுதம் தாங்கிய நீர் மூழ்கி கப்பலாக மாற்ற வடகொரியா முடிவு செய்துள்ளது. வடகொரியாவின் இந்த நடவடிக்கை கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • நாட்டின் பாதுகாப்புக்காக தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
    • 2 அதிநவீன ஏவுகணைகளை வடகொரியா அனுப்பி சோதனை மேற்கொண்டது.

    பியாங்யாங்:

    வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனை காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவுகிறது. இதனால் தங்களது நாட்டின் பாதுகாப்புக்காக தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதனை பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக கருதும் வடகொரியா இந்த பயிற்சிகளை உடனடியாக நிறுத்தும்படி எச்சரித்தது. ஆனால் தென்கொரியா தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

    இந்தநிலையில் தென்கொரியாவில் உள்ள ராணுவ நிலைகள் மற்றும் விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவது போலவும், போர் ஏற்பட்டால் தென்கொரிய எல்லைகளை ஆக்கிரமிப்பது போலவும் வடகொரியா ஒத்திகை பயிற்சி மேற்கொண்டது. அதன்படி 2 அதிநவீன ஏவுகணைகளை வடகொரியா அனுப்பி சோதனை மேற்கொண்டது.

    ஐ.நா. உடன்படிக்கையை மீறும் வடகொரியாவின் இந்த செயல் சர்வதேச அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளது என கூறி தென்கொரியா கடும் கண்டனம் தெரிவித்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கார் ஏற்றியதிலும், கத்திக்குத்திலும் படுகாயம் அடைந்த 14 பேர் ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
    • தென்கொரியாவில் இந்த ஆண்டு இது போன்ற சம்பவம் நடந்துள்ளது இது 2- வது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    சியோல்:

    தென்கொரியா லெசூர் மாகாணம் சியோங்கனம் பகுதியில் ஒரு வணிக வளாகம் உள்ளது. இங்கு நேற்று இரவு ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்தனர்.பலர் அங்குள்ள கடைக்குள்ளும், வெளியிலும் இருந்தனர்.

    அப்போது வணிக வளாகத்துக்கு வேகமாக ஒரு கார் வந்தது. அதை ஓட்டி வந்தவர் திடீரென நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றினார். இதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். பின்னர் காரை நிறுத்தி விட்டு மர்ம வாலிபர் கீழே இறங்கினான். திடீரென அவன் கையில் வைத்திருந்த கத்தியால் கண்ணில் பட்டவர்களை எல்லாம் சரமாரியாக குத்தினான். இதில் பலருக்கு கத்திக்குத்து விழுந்தது.

    இதை பார்த்ததும் பொது மக்கள் உயிருக்கு பயந்து நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இந்த கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த 9 பேர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர். இது பற்றி அறிந்ததும் பாதுகாப்பு படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்கள் மீது காரை ஏற்றி கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவருக்கு 22 வயது இருக்கும். அவர் ஏன் இந்த தாக்குதலில் ஈடுபட்டார் என தெரியவில்லை. அவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. இது தொடர்பாக அந்த வாலிபருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    கார் ஏற்றியதிலும், கத்திக்குத்திலும் படுகாயம் அடைந்த 14 பேர் ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதில் 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தென்கொரியாவில் இந்த ஆண்டு இது போன்ற சம்பவம் நடந்துள்ளது இது 2- வது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெறும் இந்த சர்வதேச ஹாக்கி போட்டிக்காக எழும்பூர் ஸ்டேடியம் நவீன வசதிகளுடன் சர்வதேச தரத்தில் புதுப்பொலிவு பெற்றுள்ளது.
    • போட்டிக்கான இறுதி கட்ட ஆயத்த பணிகளை போட்டி அமைப்பாளர்கள் தடபுடலாக செய்து வருகின்றனர்.

    சென்னை:

    ஹாக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வருகிற 3-ந் தேதி முதல் 12-ந் தேதி நடக்கிறது.

    இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மலேசியா, சீனா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

    16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெறும் இந்த சர்வதேச ஹாக்கி போட்டிக்காக எழும்பூர் ஸ்டேடியம் நவீன வசதிகளுடன் சர்வதேச தரத்தில் புதுப்பொலிவு பெற்றுள்ளது. போட்டிக்கான இறுதி கட்ட ஆயத்த பணிகளை போட்டி அமைப்பாளர்கள் தடபுடலாக செய்து வருகின்றனர்.

    இந்த போட்டியை தமிழகத்தின் எல்லா பகுதியிலும் உள்ள ரசிகர்களும் கண்டுகளிக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.) நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட ஒரு இடத்தில் போட்டியின் நேரடி ஒளிபரப்பை மெகா திரையில் பார்த்து ரசிக்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

    போட்டிக்கான ஏற்பாடுகள் ஒருபுறம் வேகமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகள் தங்களை தயார்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

    ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பங்கேற்க முதல் அணியாக மலேசியா கடந்த சனிக்கிழமை சென்னை வந்தது. இதைத்தொடர்ந்து தென்கொரியா, ஜப்பான் அணிகள் நேற்று முன்தினம் இரவு வந்தடைந்தன. விமான நிலையத்தில் இரு அணியினருக்கும் எஸ்.டி.ஏ.டி., ஹாக்கி இந்தியா சார்பில் உற்சாமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ஸ்பெயின் நாட்டில் நடந்த 4 நாடுகள் போட்டியில் கலந்து கொண்டு 3-வது இடத்தை பிடித்த ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி இன்று அதிகாலை விமானம் மூலம் சென்னை வந்து சேருகிறது. சீனா, பாகிஸ்தான் அணிகள் இரவில் வந்தடைகின்றன.

    இதற்கிடையே, சென்னை எழும்பூரில் உள்ள ஹாக்கி ஸ்டேடியத்தில் நேற்று மாலை 3.30 முதல் 4.30 மணி வரை தென்கொரியா அணியினர் பயிற்சி மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து ஜப்பான், மலேசியா அணிகள் தலா ஒரு மணி நேரம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டன.

    முன்னதாக தென்கொரியா அணியின் தலைமை பயிற்சியாளர் சியோக் யோ ஷின் கூறுகையில், 'இந்த போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். அடுத்த ஆண்டு பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி சுற்றான ஆசிய விளையாட்டுக்கு சிறந்த முறையில் தயாராக இந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை பயன்படுத்தி கொள்வோம். ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துதே எங்களது நோக்கமாகும்' என்றார்.

    • ஒரு நபர் பிறந்தவுடனேயே ஒரு வயதுடையவராக கணக்கெடுக்கப்பட்டு ஜனவரி 1-ம் தேதி ஒரு வருடத்தைப் பெறுகிறார்
    • எண்ணும் வயது முறையில் ஒரு நபரை பிறக்கும் போது பூஜ்ஜிய வயதாக கருதி பிறகு ஜனவரி 1 அன்று ஒரு வருடத்தைக் கூட்டுகிறது

    தென் கொரியாவில் பிறக்கும் குழந்தைகளின் வயதை கணக்கெடுப்பதில் நீண்ட காலமாக இரண்டு முறைகள் பின்பற்றப்பட்டு வந்தன. தற்போது இவை இரண்டையும் தென்கொரிய அரசு நீக்கியுள்ளது. மற்ற நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறையை கொண்டு வருகிறது.

    இதனால், தென் கொரியர்கள் வயதில் ஒன்று குறையப்போகிறது.

    கொரியாவில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட வயது கணக்கீட்டு முறைகளில் ஒன்று பல நூற்றாண்டுகள் பழமையான "கொரிய வயது" முறையாகும். இதன்படி, ஒரு நபர் பிறந்தவுடனேயே ஒரு வயதுடையவராக கணக்கெடுக்கப்பட்டு ஜனவரி 1-ம் தேதி ஒரு வருடத்தைப் பெறுகிறார். இந்த முறையில், டிசம்பர் 31-ம் தேதி பிறந்த ஒரு குழந்தைக்கு மறுநாள் 2 வயது ஆகும்.

    நாட்டில் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் மற்றொரு தனி "எண்ணும் வயது" முறையில், ஒரு நபரை பிறக்கும் போது பூஜ்ஜிய வயதாக கருதி, பிறகு ஜனவரி 1 அன்று, ஒரு வருடத்தைக் கூட்டுகிறது.

    பொதுவாக, 28 ஜூன் 2023 நிலவரப்படி 29 ஜூன் 2003-ல் பிறந்தவர் சர்வதேச அமைப்பின் கீழ் 19 வயதுடையவராக கருதப்படுவார்.

    ஆனால், எண்ணும் வயது முறையின் கீழ் 20 வயதுடையவராகவும் மற்றும் கொரிய வயது முறையின் கீழ் 21 வயதுடையவராகவும் கருதப்படுவார்.

    கடந்த டிசம்பரில், இரண்டு பாரம்பரிய எண்ணும் முறைகளையும் ரத்து செய்ய ஆதரவாக அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

    இது ஒரு புறமிருந்தாலும், "எண்ணும் வயது" முறையின் அடிப்படையில் ஒரு நபரின் வயதைக் கணக்கிடும் பல சட்டங்கள் அங்கு அப்படியே இருக்கும். எடுத்துக்காட்டாக, தென் கொரியர்கள், சிகரெட் மற்றும் மதுபானங்களை 19 வயதாக கணக்கெடுக்கப்படும் வருடத்திலிருந்து வாங்கலாம்.

    உள்ளூர் நிறுவனமான ஹான்கூக் ரிசர்ச் நடத்திய கருத்துக்கணிப்பின்படி, 4 தென் கொரியர்களில் 3 பேர் தரநிலைப்படுத்தலுக்கு ஆதரவாக இருந்தனர்.

    தற்போது தென் கொரியாவின் வயது கணக்கெடுக்கப்படும் முறையில் உலக நடைமுறையை பின்பற்ற தொடங்கி விட்டதால், வெளிநாடுகளுக்கு செல்லும்போது கொரிய வயதை விளக்க வேண்டியதில்லை என்பதால், இதனை தென் கொரியர்கள் ஆதரிக்கின்றனர்.

    காப்பீட்டு தொகைகள் மற்றும் அரசாங்க உதவி திட்டங்களுக்கான தகுதியை நிர்ணயம் செய்தல் போன்ற விஷயங்களில் பல தேவையற்ற சர்ச்சைகள் எழுந்ததையடுத்து தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் இதற்கான் முயற்சிகளை தீவிரமாக கையிலெடுத்தார்.

    பாரம்பரிய வயது கணக்கிடும் முறைகள், மற்ற கிழக்கு ஆசிய நாடுகளாலும் ஒரு காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்டன. ஆனால், காலப்போக்கில் பெரும்பாலானவை அதை கைவிட்டன.

    ஜப்பான் 1950-ல் சர்வதேச நடைமுறையை ஏற்றுக்கொண்டது என்பதும் வட கொரியா 1980-ல் சர்வதேச நடைமுறையை பின்பற்ற தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ×