12 ஆண்டுகளுக்கு பின்னர் ஜப்பான் பிரதமர் தென்கொரியாவுக்கு பயணம்

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா 2 நாள் பயணமாக தென்கொரியா சென்றுள்ளார்.கடந்த 12 ஆண்டுகளில் ஜப்பான் பிரதமர் ஒருவர் தென்கொரியாவுக்கு மேற்கொள்ளும் பயணம் இதுவாகும்.
12 ஆண்டுகளுக்கு பின்னர் ஜப்பான் பிரதமர் தென்கொரியாவுக்கு பயணம்
Published on

சியோல்:

வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகளால் சமீப காலமாக கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. மேலும் ஜப்பான் கடற்பகுதியிலும் அணு ஆயுத சோதனை உள்ளிட்டவற்றை நடத்தி வடகொரியா பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து வடகொரியாவை சமாளிப்பதற்காக தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியை நடத்தின.

இந்த நிலையில் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா 2 நாள் பயணமாக தென்கொரியா சென்றுள்ளார். அங்கு அதிபர் யூன் சுக் இயோலை சந்தித்து இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். கடந்த 12 ஆண்டுகளில் ஜப்பான் பிரதமர் ஒருவர் தென்கொரியாவுக்கு மேற்கொள்ளும் பயணம் இதுவாகும்.

இந்த சந்திப்பின்போது இரு தரப்பு வர்த்தகம், வடகொரியாவின் அணுசக்தி திட்டம் மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கொரிய தீபகற்பத்தில் கடந்த 1910 முதல் 1945-ம் ஆண்டு வரை நடந்த ஜப்பானிய காலனிய ஆதிக்கத்துக்கு பிரதமர் புமியோ கிஷிடா மன்னிப்பு கேட்பாரா? என்ற எதிர்பார்ப்பையும் இது ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக பிரதமர் புமியோ கிஷிடாவும், அவரது மனைவி யூகோ கிஷிடாவும் போரின்போது உயிரிழந்த தென்கொரிய ராணுவ வீரர்களுக்கு தங்களது நாட்டின் வழக்கப்படி தூபம் காட்டி, மவுன அஞ்சலி செலுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com