செய்திகள்
நேபாளத்தின் 38வது பிரதமராக கே.பி சர்மா ஒலி பதவியேற்றார்
நேபாளத்தின் 38-வது பிரதமராக நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) தலைவர் கே.பி சர்மா ஒலி இன்று பதவியேற்றார். #Nepal #KPSharmaOli
காத்மண்டு:
மன்னராட்சியின் கீழ் இருந்த நேபாளம் பெரும் மக்கள் போராட்டத்திற்கு பின்னர் குடியரசு நாடானது. 2015-ம் ஆண்டு புதிய அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்டது. இதில், பிரதிநிதிகள் சபை (கீழ்சபை), தேசிய சபை (மேல்சபை) ஆகிய இரண்டு சபைகள் கொண்ட பாராளுமன்றம் அமைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) மற்றும் மாவோயிஸ்ட் சென்டர் கட்சிகள் அடங்கிய கூட்டணி அபார வெற்றி பெற்றது. ஆளும் நேபாள காங்கிரஸ் கட்சி கூட்டணி படுதோல்வியை சந்தித்தது.
பாராளுமன்ற மேல்சபைக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 59 இடங்களில் இடதுசாரிகள் கூட்டணி 39 இடங்களில் வென்றது. நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஒருங்கினைந்த மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சி 27 இடங்களையும், மாவோயிஸ்ட் சென்டர் கட்சி 12 இடங்களையும் கைப்பற்றின. நேபாள காங்கிரஸ் கட்சி 13 இடங்களிலும், இதர கட்சிகள் நான்கு இடங்களிலும் வெற்றி பெற்றன.
தேர்தல் முடிவுகளை அந்நாட்டு தேர்தல் ஆணையம் நேற்று ஜனாதிபதி பிந்தியா தேவி பந்தாரியிடம் சமர்பித்தனர். இதனை அடுத்து அப்போதைய பிரதமர் பகதுர் துபா தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரதமராக நேபாள கம்யூனிஸ்ட் (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சி தலைவரான சர்மா ஒலி தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், கே.பி சர்மா ஒலி 38-வது பிரதமராக இன்று பதவியேற்றுக்கொண்டார். ஜனாதிபதி பிந்தியா தேவி பந்தாரி சர்மா ஒலிக்கு பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்புப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் இரண்டு பேர் மந்திரிகளாக பதவியேற்றுக்கொண்டனர்.
சர்மா ஒலி ஏற்கனவே 2015-16 வரை பிரதமராக பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #Nepal #KPSharmaOli #TamilNews