செய்திகள்

எங்கள் நாட்டு பைக்குக்கு 50 சதவீதம் இறக்குமதி வரியா? - டிரம்ப் ஆவேசம்

Published On 2018-02-14 10:07 GMT   |   Update On 2018-02-14 10:07 GMT
அமெரிக்காவில் தயாராகும் ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளுக்கு இந்தியாவில் 50 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:  

வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் வாகனங்களுக்கு மத்திய அரசு இறக்குமதி சுங்கவரி விதித்து வருகிறது. இவ்வகையில், 800 சி.சி. இழுவைத்திறன் கொண்ட வாகனங்களுக்கு அவ்வாகனத்தின் விலையில் 60 சதவீதமும் 800 சி.சி.க்கும் அதிகமான இழுவைத்திறன் கொண்ட வாகனங்களுக்கு அவ்வாகனத்தின் விலையில் 75 சதவீதமும் இறக்குமதி வரியாக வசூலிக்கப்பட்டது.

மத்திய அரசின் கலால் மற்றும் சுங்க வரித்துறை கடந்த 12-2-2018 அன்று வெளியிட்ட ஒரு அறிவிக்கையின்படி, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து வாகனங்களுக்குமான வரியை சராசரியாக 50 சதவீதமாக குறைத்து உத்தரவு வெளியானது.

இந்நிலையில், அமெரிக்காவின் இரும்புத்தொழில் தொடர்பான பாராளுமன்ற குழுவினரிடையே இன்று பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் தயாராகும் ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளுக்கு இந்தியாவில் 50 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய டிரம்ப், ’நமது தயாரிப்பை சில நாடுகளில் நாம் உற்பத்தி செய்கிறோம். அவர்களும் உற்பத்தி செய்கிறார்கள். அந்த நாடுகளில் நாம் நுழைவதற்கு ஏராளமான வரியை நாம் செலுத்த வேண்டியுள்ளது. இது இந்தியாவில் நடக்கிறது என்று நான் குறிப்பிட மாட்டேன்’ என டிரம்ப் குறிப்பிட்டபோது உடனிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சிரித்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



மேலும், சமீபத்தில் தன்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடியின் பெயரை குறிப்பிடாமல், 
’இந்தியாவில் இருந்து ஒரு ‘ஜெண்டில் மேன்’ எங்கள் நாட்டில் மோட்டார் சைக்கிள்களுக்கான இறக்குமதி வரியை தற்போது 75-லிருந்து 50 சதவீதமாகவும், 100 சதவீதமாககூட குறைத்து விட்டோம் என தெரிவித்தார்’

ஹார்லே டேவிட்சன் நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள்கள் அவர்கள் நாட்டுக்கு போய் சேர வேண்டுமானால் நீங்கள் 50 முதல் 75 சதவீதம் இறக்குமதி வரி கட்ட வேண்டியுள்ளது. அதேவேளையில், இந்தியாவில் இருந்து இங்கிருப்பவர்களுக்கு பரிச்சயம் இல்லாத பல நிறுவங்கள் தயாரிக்கும் லட்சக்கணக்கான மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

அவற்றுக்கு நாம் விதிக்கும் இறக்குமதி வரி என்ன தெரியுமா? ஒன்றுமே இல்லை. இதற்கு பெயர்தான் தாராளமய வர்த்தகமா? இந்நிலையில், அவர்களுக்கு இணையாக நாமும் இறக்குமதி விதித்தாக வேண்டும் என்று நான் கூறுகிறேன். இந்தியாமீது நான் பழி போடவில்லை. 

இதை நியாயமான தாராளமய வர்த்தகம் (fair trade) என்று கூற முடியாது. இதை இலவச வர்த்தகம் (free trade) என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால், இது நியாயமற்றது. அவர்கள் மாற்றிக் கொள்வது நல்லதாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். இல்லாவிட்டால், நாமும் சம விகிதத்தில் வரி விதித்தாக வேண்டும்.

இதனால், எதிர்காலத்தில் அவர்கள் வசூலிக்கும் அதே வரியை நாம் விதிக்க வேண்டியதாகும். இல்லாவிட்டால், அனேகமாக நம்மைப் போலவே அவர்களும் வரி விதிக்காமல் இருக்க வேண்டும்’  என்று குறிப்பிட்டார்.
Tags:    

Similar News