செய்திகள்

அசாஞ்சே மீதான கைது வாரண்டை ரத்து செய்ய லண்டன் நீதிமன்றம் மறுப்பு

Published On 2018-02-14 03:50 GMT   |   Update On 2018-02-14 03:50 GMT
ஜூலியன் அசாஞ்சே மீதான கைது வாரண்டை ரத்து செய்ய லண்டன் நீதிமன்றம் மறுத்துவிட்டதால், அவர் மீதான பிடி இறுகுகிறது.
லண்டன்:

அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாட்டின் ரகசியங்களையும் ஊழல்களையும் இணையதளங்களில் அம்பலப்படுத்தி அதிர்வலைகளை ஏற்படுத்திய விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் 2012-ஆம் ஆண்டு தஞ்சம் அடைந்தார். தூதரகத்தைவிட்டு வெளியே வந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்கா, பிரிட்டன், ஸ்வீடன் ஆகிய நாடுகள் காத்துக்கொண்டிருக்கின்றன.

குறிப்பாக பாதுகாப்பு ரகசியங்களை வெளியிட்ட அசாஞ்சேவை கைது செய்ய அமெரிக்கா தீவிரம் காட்டி வருவதால் ஈக்வடார் தூதரகத்தைவிட்டு வெளியே வரவில்லை. அவருக்கு ஈக்வடார் அரசு குடியுரிமை வழங்கி உள்ளது. எனவே, வேறு பாதுகாப்பான இடம் கிடைக்கும் வரை தூதரகத்தைவிட்டு வெளியேற அவர் விரும்பவில்லை.

இதற்கிடையே லண்டனில் உள்ள வழக்கில் அசாஞ்சே ஜாமீன் பெற்று தப்பியது தொடர்பாக வெஸ்ட்மினிஸ்டர் கோர்ட்டில் தனியாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கில் அசாஞ்சேவை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதனை ரத்து செய்யக்கோரி அசாஞ்சேவின் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் வழக்கறிஞர் முன்வைத்த வாதத்தை நிராகரித்த நீதிபதி, கைது வாரண்டை ரத்து செய்ய மறுத்துவிட்டார். ஜாமீன் பெற்று பொது நலத்திற்காக அசாஞ்சே தப்பிச் செல்லவில்லை என்றும் சட்ட விதிகளின்படி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்காதவரை அவர் மீதான கைது வாரண்டை ரத்து செய்ய முடியாது என்றும் நீதிபதி திட்டவட்டமாக கூறினார்.

வருடக்கணக்கில் தனது சுதந்திரத்தை கட்டுப்படுத்திக்கொண்டு இருந்தாலும் கைது நடவடிக்கை என்பது தவிர்க்க முடியாது என்றும் கூறியுள்ளார். கைது வாரண்ட் மீண்டும் உறுதி செய்யப்பட்டிருப்பதால், ஈக்வடார் தூதரகத்தைவிட்டு வெளியேறினால் அசாஞ்சே கைது செய்யப்படும் நிலை உள்ளது. #tamilnews
Tags:    

Similar News