செய்திகள்
இந்தோனேசியா: ஜாவா தீவில் நிலநடுக்கம்- இடிபாடுகளில் சிக்கி இருவர் பலி
இந்தோனேசியா நாட்டின் ஜாவா தீவில் இன்று அதிகாலை 6.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
ஜகார்த்தா:
நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பசிபிக் நெருப்பு வளையத்தில் இந்தோனேசியா நாடு அமைந்துள்ளது. இங்குள்ள ஜாவா தீவில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜாவா சுமத்ரா தீவுக்கு மேற்கே கடலுக்கடியில் சுமார் 91 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னர் திரும்பப் பெறப்பட்டது. இந்த நிலநடுக்கம் சுமார் 20 நொடிகள் உணரப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் மத்திய மற்றும் மேற்கு ஜாவா பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. இந்த இடிபாடுகளில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், மேலும் 10 ஆயிரத்துக்கும் அதிகனானோர் வீடுகளை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.