செய்திகள்

நைஜீரியாவின் மகுமெரி நகரை போகோஹரம் தீவிரவாதிகள் கைப்பற்றியதாக தகவல்

Published On 2017-11-26 00:16 GMT   |   Update On 2017-11-26 00:16 GMT
நைஜீரியா போர்னோ மாகாணத்தில் உள்ள மகுமெரி நகரை போகோஹரம் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மைதுகுரி:

நைஜீரியாவில் ஒரு மதத்தின் அடிப்படையிலான அரசாங்கத்தை நிறுவ வேண்டும் என்ற நோக்கத்துடன் போகோஹரம் தீவிரவாத அமைப்பினர் 2002-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றனர்.

2009-ம் ஆண்டு முதல் அவர்கள் ஆயுதப்போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். ஆட்களை கடத்துவதும், படுகொலைகள் செய்வதும் அவர்களின் அன்றாட வழக்கமாகி விட்டது. சில நகரங்களை தாக்குதல் மூலம் கைப்பற்றி அவற்றை தங்கள் கட்டுப்பாட்டிலும் வைத்துள்ளனர். அவர்களுடன் ராணுவத்தினர் சண்டையிட்டி தீவிரவாதிகள் பிடியில் இருக்கும் நகரங்கள் மீட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள போர்னோ மாகாணத்திற்கு உட்பட்ட மகுமெரி நகரை தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலால் அங்கு வசித்து வரும் மக்கள் அருகில் உள்ள காடுகளுக்கு பயந்துஓடி விட்டதாகவும் கூறப்படுகிறது.



அப்பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது உண்மைதான் என ஒரு ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். இருப்பினும் அந்நகரை தீவிரவாதிகள் முழுமையாக கைப்பற்றியது பற்றி எந்த தகவலையும் அவர் வெளியிடவில்லை.

கடந்த சில தினங்களுக்கு முன் இப்பகுதிக்கு அருகில் உள்ள அதாமாவா பகுதியில் ஒரு மசூதியில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News