செய்திகள்

கென்யா அதிபர் தேர்தலில் கென்யட்டாவின் வெற்றி செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Published On 2017-11-20 13:09 GMT   |   Update On 2017-11-20 13:09 GMT
கென்யாவில் நடந்த அதிபர் தேர்தலில் உகுரு கென்யட்டா வெற்றி பெற்றது செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால், அவர் பதவியேற்பதில் உள்ள சிக்கல் தீர்ந்துள்ளது.
நைரோபி:

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் அதிபர் ஊகுரு கென்யட்டாவின் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் 8-ந்தேதி அதிபர் தேர்தல் நடந்தது. தேர்தலில் அவருக்கு எதிராக எதிர்க்கட்சி சார்பில் ரைலா ஓடிங்கா போட்டியிட்டார். ஆனால், இந்த தேர்தலில் மறுபடியும் ஊகுரு கென்யட்டா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. முறைகேடுகள் நடந்ததற்கான ஆதாரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. இதனால் தேர்தலை ரத்து செய்து தேர்தல் துறை உத்தரவிட்டது.

அதன்பின்னர் அக்டோபர் 26-ம் தேதி மறுதேர்தல் நடந்தது.  தங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாலும், வழக்கில் தீர்ப்பு வெளியிடப்படாத நிலையில் தேர்தலை நடத்தியதாலும், எதிர்க்கட்சி இந்த தேர்தலை புறக்கணித்தது. இதனால் வெறும் 39 சதவீத வாக்குகளே பதிவானது. இதில் 98 சதவீத வாக்குகளைப் பெற்று கென்யட்டா வெற்றி பெற்றார்.

இந்த தேர்தல் செல்லாது என அறிவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி தள்ளுபடி செய்தது. அதிபர் தேர்தலில் உகுரு கென்யட்டா வெற்றி பெற்றது செல்லும் என்றும் தீர்ப்பளித்தது.

வரும் 28-ம் தேதி கென்யட்டா பதவியேற்க இந்த தீர்ப்பு வழிவகுத்துள்ளது. இதையடுத்து கென்யட்டா ஆதரவாளர்கள், வெற்றியை கொண்டாடி வருகின்றனர். 
Tags:    

Similar News