செய்திகள்
சிரியா: ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து அபு கமல் நகரம் மீட்பு
சிரியா நாட்டின் கிழக்கு பகுதியில் ஈராக் எல்லையோரத்தில் உள்ள அபு கமல் நகரத்தை ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து மீட்டுள்ளதாக கூட்டுப்படைகள் தெரிவித்துள்ளது.
டமாஸ்கஸ்:
துருக்கி எல்லையையொட்டிய சிரியாவின் டேய்ர் அல் ஸோர் மாகாணம் தீவிரவாத கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இதனால் இங்கு சிரிய அரசு படைகளும், ரஷிய படைகளும் போர் விமானங்கள் முலம் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஈராக் நாட்டின் எல்லையோர நகரமான டேய்ர் அல் ஸோர் மாகாணத்தின் அருகேயுள்ள அபு கமல் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து கூட்டுப்படையினர் சமீபத்தில் மீட்டனர். இருப்பினும் அப்பகுதியில் வசித்துவந்த ஸ்லீப்பர் செல்களின் உதவியுடன் தாக்குதல் நடத்தி ஐ.எஸ். தீவிரவாதிகள் அந்நகரை மீண்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் கடைசி நகரமான அபு கமல் நகரை கைப்பற்ற அமெரிக்காவின் ஆதரவுடன் அந்நாட்டின் அரசுப் படைகள் நேற்று முதல் உச்சகட்ட தாக்குதல் நடத்தின.
இந்நிலையில், அபு கமல் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து மீட்டுள்ளதாக கூட்டுப் படையினர் அறிவித்துள்ளனர்.