செய்திகள்
ஐ.எஸ். கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நகரையும் கைப்பற்றி விட்டோம்: ஈராக் ராணுவம்
ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து ரவா நகரை கைப்பற்றிவிட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
பாக்தாத்:
ஈராக், சிரியா மற்றும் துருக்கியில் அரசு படைகளை எதிர்த்து ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். மூன்று நாடுகளில் அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள இடங்களை இணைத்து தனிநாடு உருவாக்குவதே அவர்களின் நோக்கமாகும். அதற்காக அவர்கள் நடத்தும் தாக்குதல்களில் பலர் உயிரிழந்துள்ளனர்.
ஈராக்கில் சில பகுதிகள் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. அப்பகுதிகளை ராணுவம் தாக்குதல் நடத்தி கைப்பற்றி வருகிறது. கடைசியாக சிரியா எல்லையை ஒட்டிய ரவா நகரம் மட்டும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.
இந்நிலையில், இன்று ரவா நகரில் அதிரடி தாக்குதல் நடத்தி அந்நகரை ஐ.எஸ். கட்டுப்பாட்டில் இருந்து முழுமையாக கைப்பற்றிவிட்டதாக ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் ஈராக்கின் கொடி பறக்கவிடப்பட்டது என ஈராக் ராணுவ தளபதி அப்தெல்அமிர் யாரல்லா தெரிவித்துள்ளார்.