செய்திகள்

கொலம்பியா நாட்டில் ஒரே இடத்தில் ரூ.22 ஆயிரம் கோடி போதை மருந்து பறிமுதல்

Published On 2017-11-09 05:56 GMT   |   Update On 2017-11-09 05:57 GMT
கொலம்பியா நாட்டில் ஆண்டியோகியா என்ற இடத்தில் வாழைத்தோட்டம் ஒன்றில் புதைத்து வைத்து இருந்த ரூ.22 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை மருந்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நியூயார்க்:

அமெரிக்க கண்டத்தில் உள்ள கொலம்பியா நாடு சர்வதேச போதை மருந்து கடத்தல் கும்பலின் தலைமையிடமாக செயல்பட்டு வருகிறது.

இங்கிருந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பல ஆயிரம் கோடி மதிப்புள்ள போதை மருந்துகளை கடத்தி வருகிறார்கள். குறிப்பாக அதிக போதை திறன்கொண்ட கோக்கைன் போதை மருந்துகளை கொலம்பியாவில் இருந்து கடத்துகிறார்கள்.

போதை மருந்து கும்பலை ஒழிக்க கொலம்பிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக அடிக்கடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அங்குள்ள ஆண்டியோகியா என்ற இடத்தில் வாழைத்தோட்டம் ஒன்றில் பெரிய அளவில் போதை மருந்துகளை புதைத்து வைத்து இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

சுமார் 12 டன் அளவிற்கு கோக்கைன் போதை மருந்துகள் பிளாஸ்டிக் பைகளில் தனித்தனி பொட்டலங்களாக அடைத்து புதைத்து வைக்கப்பட்டிருந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றினார்கள். இந்த போதை மருந்தின் மதிப்பு ரூ.22 ஆயிரம் கோடி.

ஒரே இடத்தில் இவ்வளவு அதிகமான மதிப்புள்ள போதை மருந்து கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை ஆகும். இது சம்மந்தமாக 4 பேரை கைது செய்துள்ளனர். இதன் பின்னணியில் உள்ள போதை மருந்து கும்பல் தலைமறைவாகி விட்டது. அவர்களையும் பிடிக்க வலைவீசி உள்ளனர்.
Tags:    

Similar News