செய்திகள்

அமெரிக்கா: மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலி

Published On 2017-10-31 22:26 GMT   |   Update On 2017-10-31 22:26 GMT
அமெரிக்காவில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
நியூயார்க்:

அமெரிக்காவில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் லோயர் மன்ஹாட்டன் பகுதியில் மேற்கு நெடுஞ்சாலையில் உள்ள பள்ளி அருகில் பொதுமக்கள் கூட்டமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் லாரி ஒன்றை வேகமாக ஓட்டி வந்தார். அந்த பாதையில் நடந்து கொண்டிருந்த மக்கள் மீது மோதினார். மேலும், தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் அப்பகுதியில் நடமாடியவர்கள் மீது சரமாரியாக சுட தொடங்கினார்.
 


இந்த திடீர் துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். துப்பாக்கி சூடு நடத்திய ஆசாமியை மடக்கி பிடித்தனர். அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திடீர் தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இது கோழைத்தனமான தாக்குதல் என மன்ஹாட்டன் மேயர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி வெள்ளை மாளிகை நிர்வாகம் கேட்டுள்ளது.

இது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலாக இருக்கலாமாக என்ற கோணத்தில் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

சமீப காலமாக தீவிரவாத அமைப்பினர் வாகனங்களில் வந்து அப்பாவி மக்கள் மீது ஏற்றியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News