செய்திகள்

அமெரிக்காவில் போலீசார் கைப்பற்றிய சடலம் மாயமான இந்திய சிறுமியா?

Published On 2017-10-23 07:53 GMT   |   Update On 2017-10-23 07:53 GMT
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் கண்டெடுக்கப்பட்ட சிறுமியின் உடல் 15 நாட்களுக்கு முன்னர் காணாமல் 3-வயது இந்திய சிறுமியின் உடலாக இருக்கலாம் என டெக்சாஸ் போலீசார் தெரிவித்தனர்.
ஹூஸ்டன்:

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ரிச்சர்ட்சன் நகரில் வெஸ்லி மேத்யூஸ் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார். இவரின் இரண்டாவது 3-வயது மகளான ஷெரின் மேத்யூசு அனாதை இல்லத்திலிருந்து தத்தெடுக்கப்பட்டவர் ஆகும்.

கடந்த 7-ம் தேதி சிறுமி ஷெரின் பால் குடிக்க மறுத்தாள். இது அவளது வளர்ப்பு தந்தை வெஸ்லிக்கு கோபத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. உடனே அவர் அந்த சிறுமியை அதிகாலை 3 மணிக்கு வீட்டுக்கு வெளியே நடைபாதையில் விட்டு விட்டு சென்று விட்டார். அதன்பின்னர் அந்த சிறுமி காணாமல் போனாள்.

இது குறித்து அவர், ரிச்சர்ட்சன் நகர் போலீசில் புகார் செய்தார். சுற்று வட்டாரப்பகுதிகளில் அந்த சிறுமியை போலீசார் தேடினர். சிறுமியை தேடும் பணியில் ஆளில்லா விமானங்களை போலீசார் பயன்படுத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மேத்யூசுவின் வீட்டிற்கு அருகில் உள்ள கால்வாயில் இருந்து நேற்று சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக டெக்ஸாஸ் போலீசார் தெரிவித்தனர். அது காணாமல் போன சிறுமியின் உடலாக இருக்கலாம் என சந்தேகப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து மருத்துவ பரிசோதனை நடைபெற்று கொண்டிருக்கிறது.

சிறுமியின் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News