செய்திகள்

லண்டன் மாலில் ஆசிட் தாக்குதல்: 6 பேர் காயம்

Published On 2017-09-24 00:19 GMT   |   Update On 2017-09-24 00:19 GMT
லண்டனின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மாலில் மர்ம ஆசாமிகள் நடத்திய ஆசிட் தாக்குதலில் 6 பேர் காயம் அடைந்தனர்.
லண்டன்:

லண்டனின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மாலில் மர்ம ஆசாமிகள் நடத்திய ஆசிட் தாக்குதலில் 6 பேர் காயம் அடைந்தனர்.

லண்டனில் கடந்த சில ஆண்டுகளாக ஆசிட் வீச்சு, அரிக்கும் ஒருவகை திரவத்தை வீசி தாக்குவது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. 2010ம் ஆண்டுக்குப் பிறகு இதுவரையில் 1800 ஆசிட் தாக்குதல் சம்பவங்கள் நடந்திருப்பதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு 454 சம்பவங்கள் நடந்துள்ளன.

இந்நிலையில், கிழக்கு லண்டனில் அதிநவீன வசதிகளை கொண்ட மால்கள் நிறைய அமைந்துள்ளன. ஸ்டப்போர்ட் பகுதியில் உள்ள மாலில் நுழைந்த மர்ம நபர்கள் சிலர், அங்கிருந்த கூட்டத்திற்குள் புகுந்து அரிக்கும் தன்மை கொண்ட ஒருவித திரவத்தை பார்வையாளர்கள் மீது வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் சுமார் 6 பேர் காயம் அடைந்திருக்கலாம் என முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது. தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், இந்த தாக்குதலில் தீவிரவாதிகளுக்கு எந்த தொடர்பும் இல்லை. இதுதொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரித்து வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த வாரம் லண்டனில் சுரங்க ரெயிலில் வெடி குண்டு வெடித்து 30க்கு மேற்பட்டோர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News