செய்திகள்
மாலியில் ஐ.நா. அமைதிப்படையினர் மீது தீவிரவாத தாக்குதல்: 2 பேர் பலி - ஐ.நா. பொதுச்செயலாளர் கண்டனம்
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ஐ.நா அமைதிப்படையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு ஐ.நா. சபை பொதுச்செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பமாகோ:
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ஐ.நா சபையின் கீழ் செயல்படும் அமைதிப்படை முகாம்கள் உள்ளன. ஆப்பிரிக்க நாடுகளில் செயல்படும் தீவிரவாத இயக்கங்களை அழிக்கும் பணியில் இந்த படை ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் அந்நாட்டின் வடக்குப்பகுதியில் உள்ள நகரான கிடால் பகுதியில் நான்கு அமைதிப்படையினர் சென்ற வாகனம் தீவிரவாதிகள் வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி வெடித்தது.
இந்த தாக்குதலில் வாகனத்தில் சென்ற இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற இரண்டு வீரர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த தகவலை உறுதி செய்துள்ள ஐ.நா சபை, இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. அதில் செவ்வாய்கிழமை மாலியில் ஐ.நா சபையின் கீழ் செயல்படும் அமைதிப்படை வீரர்கள் மீது நடந்த தாக்குதலில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கும் அவர்களுக்கு நெருங்கியவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைதிப்படையினர் மீதான தாக்குதல் சர்வதேச சட்டப்படி போர் குற்றமாகும் என குறிப்பிட்டுள்ளார்.