செய்திகள்
ஏமனில் ஹெலிகாப்டர் விபத்து: 4 ராணுவ வீரர்கள் பலி
ஏமன் நாட்டில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் தங்கள் நாட்டைச் சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது.
அபுதாபி:
ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ஏமன் அரசு படைகளும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி தலைமையிலான கூட்டுப் படை வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல் ஏமன் நாட்டில் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க படைகளும் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், ஏமன் நாட்டில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் தங்கள் நாட்டைச் சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சேர்ந்த ராணுவ வீரர்களும் ஏமன் வீரர்களும் கூட்டாக ஷிட்டே தீவிரவாத முகாம் மீது தாக்குதல் நடத்த முயன்றனர். அப்போது ஐக்கிய அரபு அமீரக வீரர்கள் பயணித்த ஹெலிகாப்டர் ஷாப்வா மாகாணத்தில் தரையிறங்க முயன்றபோது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு விபத்துக்குள்ளானது.