செய்திகள்
இத்தாலி: அமெரிக்க அதிபர் டிரம்ப் போல் வேடமணிந்து ஏ.டி.எம். கொள்ளை - சகோதரர்கள் கைது
இத்தாலி நாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முகமூடியை அணிந்து கொண்டு வங்கி ஏ.டி.எம்.-ஐ கொள்ளையடித்த இரு சகோதரர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
ரோம்:
வடக்கு இத்தாலி பகுதியில் தொடர்ச்சியாக ஒரு கும்பல் ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில் இருவர் சேர்ந்து ஒரு ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து சுமார் 1 லட்சம் யூரோ மதிப்புள்ள கொள்ளையடித்துள்ளனர்.
அந்த ஏ.டி.எம்.யில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போல வேடமணிந்த இருவர் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்களே குற்றவாளிகள் என்பது தெரியவந்தது.
கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சுமார் 26 மற்றும் 30 வயது மதிக்கத்தக்க சகோதரர்கள். 1997ல் வெளிவந்த ’தி ஜாக்கல்’ என்னும் திரைப்படத்தை பார்த்து இவர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவர்களிடமிருந்து கொள்ளையடிக்க பயன்படுத்திய பொருட்கள் மற்றும் டிரம்ப் போன்ற முகமூடி மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.