செய்திகள்

நைஜீரியா: மசூதிக்குள் தற்கொலைப்படை பெண் தீவிரவாதி தாக்குதல் - 8 பேர் பலி

Published On 2017-07-17 12:26 GMT   |   Update On 2017-07-17 12:26 GMT
நைஜீரியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள மசூதியில் இன்று போக்கோ ஹரம் தற்கொலைப்படையை சேர்ந்த பெண் தீவிரவாதி நடத்திய மனிதகுண்டு தாக்குதலில் 8 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
மைடுகுரி:

நைஜீரியா நாட்டின் போர்னோ மாநில தலைநகரான மைடுகுரி நகரில் போக்கோ ஹரம் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.  இந்நகரின் மத்திய பகுதியில் உள்ள லண்டன் சிக்கி பகுதியில் மிக பிரபலமான மசூதி ஒன்றுள்ளது. 

(உள்ளூர் நேரப்படி) இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் இந்த மசூதியின் அருகே வெளியூரை சேர்ந்த ஒரு பெண்ணின் நடமாட்டத்தை கண்ட சிலர் அவளை மடக்கிப் பிடித்து சோதனையிட முயன்றனர். அவர்களிடம் பிடிபடாமல் தப்பியோடிய அந்தப் பெண் அருகாமையில் உள்ள மசூதிக்குள் புகுந்து கதவை தாளிட்டுக் கொண்டாள். 

அவளை பிடிப்பதற்கு சிலர் பின்தொடர்ந்து வருவதை கண்ட அந்தப் பெண் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை திடீரென்று வெடிக்க வைத்தாள். இதில், அந்த பெண்ணின் உடல் பாகங்கள் சின்னாபின்னமாக தெறித்து சதை துண்டங்களாக பறந்து விழுந்தன. அவளை விரட்டிவந்தவர்களில் எட்டு பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். படுகாயமடைந்த 15 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது.



மசூதிக்குள் தாக்குதல் நடந்த அதே வேளையில் மைடுகுரி நகரின் மற்ற பகுதியில் உடலில் வெடிகுண்டுகளுடன் தாக்குதல் நடத்தவந்த மூன்று பெண் தீவிரவாதிகளும் இன்று உடல் சிதறி பலியாகினர். மாமான்ட்டி என்ற இடத்தில் பொதுமக்களிடம் இருந்து தப்பியோட முயன்ற இரு பெண் தீவிரவாதிகள் கால்வாயை தாண்டும்போது குண்டுகள் வெடித்து உயிரிழந்தனர். சிமாரி என்ற இடத்தில் ஒரு பெண் தீவிரவாதி குண்டுகளை வெடிக்க வைத்து உயிரிழந்தாள்.

இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சரிசமமான எண்ணிக்கையில் வாழ்ந்து வரும் நைஜீரியாவில் இஸ்லாமிய சட்டதிட்டத்துக்கு உட்பட்ட அரசை நிறுவ வேண்டும் என்று கூறி ஒரு பிரிவினர் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபகாலமாக தற்கொலைப் படை தாக்குதலுக்கு இவர்கள் பெண்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இதே மைடுகுரி நகரில் உள்ள மோலை கொலேமரி பகுதியில் போக்கோஹரம் தற்கொலைப் படையை சேர்ந்த 4 பெண் தீவிரவாதிகள் கடந்த வாரம் திங்கட்கிழமை நடத்திய மனிதகுண்டு தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தது நினைவிருக்கலாம்.
Tags:    

Similar News