செய்திகள்
கோப்புப்படம்

பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரி தீப்பிடித்து விபத்து: எண்ணெய் அள்ளச்சென்ற 100 பேர் உடல்கருகி பலி

Published On 2017-06-25 05:13 GMT   |   Update On 2017-06-25 05:13 GMT
பாகிஸ்தானில் இன்று காலை ஆயில் டேங்கர் லாரி தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் எண்ணெய் அள்ளச்சென்ற 100 பேர் உடல்கருகி பலியாகினர்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஹவல்பூர் நகரில் இன்று காலை எண்ணெய் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரியானது சாலையின் வளைவில் திரும்பும் போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், லாரியிலிருந்த எண்ணெய் சாலையில் சிந்தி ஆறாக ஓடியது. இதையறிந்த, அப்பகுதி கிராம மக்கள் கையில் வாளிகளுடன் எண்ணெய் அள்ள லாரியை முற்றுகையிட்டனர்.

100-க்கும் அதிகமானோர் லாரியிலிருந்து சிந்திய எண்ணெயை அள்ளிக்கொண்டிருக்கும் போது, எதிர்பாராதவிதமாக லாரி தீப்பிடித்து எரிந்தது. இதனால், லாரியைச் சுற்றியிருந்த 100 பேர் உடல்கருகி பரிதாபமாக பலியாகினர். 75 பேர் தீக்காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்து நடந்த இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வண்டிகள் விரைந்துள்ளதாகவும், தீ விபத்தின் போது லாரியின் அருகே இருந்த 6 கார்கள் மற்றும் 12 பைக்குகள் எரிந்து நாசமானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags:    

Similar News