பிலிப்பைன்சில் பள்ளிக்குள் புகுந்து மாணவர்களை சிறைபிடித்த தீவிரவாதிகள்
மணிலா:
பிலிப்பைன்ஸ் நாட்டில் தென் பகுதியில் மின் டானவோ தீவு உள்ளது. அங்குள்ள வடக்கு கோடோபடோ மாகாணத்தில் பிக்கவாயன் நகரம் உள்ளது.
அங்குள்ள பள்ளிக்குள் இன்று காலை பாங்சமோரோ தீவிரவாதிகள், 300 பேர் துப்பாக்கியுடன் அதிரடியாக புகுந்தனர். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் ராணுவமும், போலீசாரும் அங்கு விரைந்தனர். தீவிரவாதிகள் பிடியில் இருக்கும் பள்ளியை முற்றுகையிட்டனர். இதை அறிந்ததும் தீவிரவாதிகள் மாணவர்களை சிறைபிடித்து பிணைக் கைதிகளாக வைத்துள்ளனர்.
அவர்களை மீட்க தீவிர வாதிகளுடன் ராணுவத்தினர் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டுள்ளனர். எனவே இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடக்கிறது. இத்தகவலை போலீஸ் அதிகாரி ரியலான் மமோன் தெரிவித்தார்.
இதற்கிடையே பாங் சமோரோ தீவிரவாதிகளுக்கு ஐ.எஸ்.தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது. அவர்கள் 5 பேரை மட்டும் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர் என்றும் ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள் ளார்.
ஆனால் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளை மனித கேடயமாக பயன்படுத்தி தப்புவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.